Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, டிசம்பர் 25, 2009

அக அழகும், முக அழகும் - 1

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

”A thing of beauty is joy for ever” என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதைவரி உண்டு. அழகு நமக்கு இன்பம் அளிக்கிறது.எந்தப்பொருளில் அழகு இல்லையோ அதில் நமக்கு இன்பம் இருப்பதில்லை.  இன்பம் இல்லாத பொருட்கள் எல்லாம் சுமையாகவே மாறிவிடுகின்றன. நம் மன நிலை வளரவளர வேற்றுமைகளையும், குறுகிய மனப்பான்மையையும் அறவே ஒழித்துவிட்டு அழகின் உண்மையை உணரமுடியும். மனம் பக்குவம் அடைந்து விட்டால் அழகிலே உண்மையையும் உண்மையில் அழகையும் சுலபமாகக் காண முடியும்.
கவிஞரும் ஞானியும் சிந்தனையாளருமான எமர்ஸன் ”தூய உள்ளங்களில்தான் அழகு வந்து குடியிருக்க முடியும். களங்கம் நிறைந்த உள்ளங்களில் கற்பனைத் திறனோ அழகோ நிலைத்து நிற்க முடியாது” என்று கூறுகிறார்.
பழந்தமிழ் நூல்கள் கூறும் அழகு:
நமது பழந்தமிழ் நூல்கள் அழகைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போம்.
     குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
     மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
     நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
     கல்வி அழகே அழகு.

“தலைமயிரை விதவிதமாகச் சீவி முடித்துக் கொண்டை போட்டிருக்கும் அழகும் அழகல்ல. விதவிதமான அலங்கார வேலைப்பாடுள்ள முந்தானை அழகும் அழகல்ல. மஞ்சள் பூச்சினால் ஏற்பட்ட மங்களகரமான அழகும் அழகல்லவாம். நல்லவராய் உள்ளோம் என்ற சிறப்போடு கல்வியறிவு என்னும் உயர் அழகோடு திகழ்வதே உண்மையான அழகு” என்கிறது நாலடியார்.
அணி என்ற சொல்லுக்கும் அழகு என்று பொருள்.புலவர்கள் தம் கற்பனை ஆற்றலாலும் மொழிப் புலமையாலும் அழகு சேர்த்து செய்யுள் இயற்றுகிறார்கள். செய்யுளில் காணப்படும் அழகு, அணி என்று சொல்லப்படுகிறது. எது அழகு அல்லது அணி என்பதை நான்மணிக் கடிகை இப்படிக் குறிப்பிடுகிறது.
    நிலத்துக்கணியென்ப நெல்லும் கரும்பும்
    குளத்துகணியென்ப தாமரை-பெண்மை
    நலத்துகணியென்ப நாணம், தனக்கணியாம்
    தான் செல் உலகத்தறம்.

(தான் செல் உலகத்தறம்: தான் கடைப்பிடிக்கும், உலகிற்கு நன்மை செய்யும் தருமம்)
முருகன் அழகு தூய அழகு
நம் நாட்டிலே சைவத்திலும் வைணவத்திலும் அழகுத்திருமேனி உடையவர்களகக்
கந்தனும் கண்ணனும் திருக்கோலம் கொண்டு விளங்குகிறார்கள். முருகன் என்ற சொல்லுக்கே பேரழகுடையவன் என்று பொருள். முருகு என்றாலே அழகு, இளமை,மணம் எல்லாவற்றையும் குறிக்கும். இந்த நான்கிலும் சிறந்து விளங்குவதால் கந்தனுக்கு முருகன் என்ற திருநாமம் உரியதாயிற்று.

முருகனின் பேரெழிலில் ஈடுபட்ட குமரகுருபரர்,
“இழுமென் அருவி சொரியும் இமய முதல்வி புதல்வன் வருகவே 
இயலும் நடையும் வடிவும் அழகும் எழுத அரியன் வருகவே 
ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே 
ஒருவன் இருவரொடு கை தொழுநல் உபய சரணன் வருகவே

விழுது விடு வெண்நிலவு பொழியும் நகையன் வருக வருகவே
விளரி பயிலும் அளியும் ஞிமிறும் விரவு குமரன் வருகவே 
மழலை முதிர முதிரும் மதுர வசனன் வருக வருகவே 
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே”

என்று  அழைக்கிறார்.
(இழுமென் அருவி - பேரொலியுடன் வீழும் அருவி; கமல வதனன் - தாமரை போன்ற முகமுடையவன்;  ஒருவன் இருவரொடு - ஒப்பற்ற சிவனார்  பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரோடும் கூடி;  உபய சரணன் - இரு திருவடிகளை உடையவன்; நகையன் - புன்சிரிப்புடன் கூடியவன்;  விளரி பயிலும் அளி - விளரி என்ற ராகத்தைக் கற்றுப் பாடும் வண்டு;  விரவு - சூழப்பட்ட; மதுர வசனன் - இனிய சொற்களை உடையவன்; பரிதி புரியின் மருவு - பரிதிபுரி என்று வழங்கப் படும் புள்ளிருக்கு வேளூர் என்ற தலத்தில் உறையும்)
அருணகிரிநாதர் கேட்கும் நாலாயிரம் கண்கள்: 
திருப்புகழ் பாடிய முருக பக்தரான அருணகிரிநாதர் திருச்செங்கோடு செல்கிறார்.அங்குள்ள முருகப்பெருமானுடைய பேரெழிலைக் கண்டு பேரானந்தம் அடைகிறார். ஆனாலும் அவருக்கு ஒரு குறை. இந்தப் பேரழகனின் பேரழகைப்  பார்க்க இரண்டு கண்கள் தானே இருக்கின்றன, இன்னும் பல கண்கள் இருந்தால் இந்த முருகப் பெருமானை இன்னும் நன்றாக அனுபவிக்கலாமே என்று தோன்றுகிறது.
“சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ 
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே”

இந்த பிரமதேவனுக்குத் தான் எவ்வளவு கஞ்சத்தனம்! கொடுத்தது தான் கொடுத்தான் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்திருக்கக் கூடாதா? இந்தப் பேரழகன் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண்களையாவது கொடுத்திருக்கக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார். முருகன் அழகு அவரை அப்படிப் பேச வைக்கிறது!
சூரன் கண்ட அழகு:
பக்தர்கள் முருகனைப் போற்றிப் பரவுவது இயல்பு.ஆனல் பகைவனும் போற்றும் அழகனாக முருகன் விளங்குவதைப் பார்க்கலாம். சூரபத்மனின் எதிரே முருகன் வந்து நின்ற போதும் கூட யாரோ ஒரு குழந்தை வந்திருக்கிறது என்று நினைத்தானே தவிர அவனுடைய பேரழகைக் காணும் ஆற்றல் அவனுக்கு இல்லை. அதை உணர்ந்த முருகன் மிகப்பெரிய திரு உருவத்தை எடுத்துத் தன் அழகு சூரனுக்குப் புலப்படும்படி செய்தான். எல்லைகாண முடியாத அந்தப் பேரழகை அனுபவித்து  வியந்து பேசுகிறான் சூரன்.
“உலகம் மன்மதனைப் பேரழகன் என்று கொண்டடுகிறதே! அந்த மன்மதன் இந்தப் பேரழகனுக்கு முன்னால் நிற்க முடியுமா? இவன் திருவடியில் உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம்கோடி மன்மதர்களுடைய அழகு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா?” என்று அதிசயிக்கிறான்.
ஆயிரகோடி காமர் அழகெல்லாந்திரண்டு ஒன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்
தூய இவ்வெழிலுக்கு ஆற்றாதென்றிடின், இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்கெல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்?

இதற்கு முன் அசுரத்தன்மையோடு இருந்தவனை முருகனுடைய பேரழகு கவர்ந்து அவன் உள்ளத்தை  உருக்கி விட்டது. அவன் கண்களில் இருந்த மாசு அகன்று விட்டது. அந்த அழகு தூய அழகு. உள்ளத்தை உருக்கும் அழகு.
அழகில் இரண்டு வகை உண்டு - ஒன்று தூய அழகு, மற்றொன்று மாய அழகு.  சில அழகு புறக்கண்ணில் பட்டதுமே தூய எண்ணங்களை மனதில் உண்டாக்கும். பொதுவாகவே சின்னக்குழந்தைகள் தன் பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்போது நம் மனதில் ஆனந்தம் உண்டாகிறது. கள்ளமில்லாச் சிரிப்பு அது. சில அழகுகள் கெட்ட எண்ணத்தை உண்டாக்கும். அவை  மாய அழகு.
குழந்தை முருகன் தூய பேரழகுடையவன். அதைத் தூய இவ்வெழில் என்று சொல்கிறான். அந்தத்தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை,அறியாமை இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது.
இராமன் அழகு, அழியா அழகு: 
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனின் அழகைச் சொல்ல விழைகிறார். ஆனால் சொல்ல முடியாமல் திகைக்கிறார். இவ்வளவுக்கும் அப்பொழுது இராமன் ஆடை ஆபரணங்களையோ, பட்டுப் பீதாம்பரங்களையோ அணிந்திருக்கவில்லை. வெறும் மரவுரி மட்டுமே தரித்திருக்கிறான். இராமனுடைய மேனியில் பட்ட சூரியன் ஒளி, இராமனுடைய மேனி ஜோதியில் மறைந்து போகிறதாம். இராம ஜோதி, சூரிய ஜோதியை விஞ்சி விடுகிறது.

    வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய
    பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
    மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
    ஐயோ! இவன் வடிவென்தொர் அழியா அழகுடையான்

மை அடர்ந்து கறுப்பு நிறம் உடையது. அது அடர்ந்த கருமைக்கு உவமை.  மரகதம் பசுமைநிறம் படைத்து குளிர்ச்சி தருவதால் நிறத்தோடு, தண்மை குளிர்ச்சிக்கும் ஒப்பாக ஆனது. மறிகடல் நீலநிறம் உடையதாய் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அது இராமனுடைய இயங்கும் தன்மைக்கு உவமையானது. மழைமுகில் கறுப்பு நிறமும் தண்ணீர் என்னும் பயனும் உடைய காரணத்தால், உயிர்களுக்கு நன்மை செய்வதால் உவமையானது. கருமையும், தண்மையும் இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுக்கு உவமை காண முடியாமல் ”ஐயோ”என இரக்கம் மேலிட முடிக்கிறார். ஆனால் அதுவே இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது.
இராமன் அழகு அழியா அழகு. அந்த அழகு சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரைப் பூவைப் போன்றது. என்றும் வாடாத, அழியாத அழகு.
வடிவும் முடிவும்:
கம்பன் கண்ட அழகு இப்படி என்றால் மிதிலை நகர்ப் பெண்கள் இராமனை எப்படிக் கண்டார்கள்?
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

மிதிலை நகரில் இராமன் உலா வருகிறான். சீதை மணாளனைப் பார்க்கும் ஆவலில்  மிதிலைப் பெண்கள் வந்து மொய்க்கிறார்கள். இராமனுடைய தோளைப் பார்த்தவர்கள் அந்தத் தோளின் அழகில் ஈடுபட்டவர்களாய் அந்தத் தோளிலிருந்து தம் கண்களை எடுக்கமுடியாமல் அதன் அழகிலே தேனுண்ட வண்டுபோல் மயங்கிவிட்டார்கள். சரி, அவனுடைய தடக்கையைப் பார்த்தவர்கள் என்ன செய்தார்கள்? அவனுடைய இடது கையைப் பார்த்தவர்கள் வலது கையைப் பார்த்தார்களா? இல்லையே! முதலில் பார்த்த இடது கையிலிருந்து கண்ணை எடுக்கவே இல்லையே! இராமனின் திருவடியைப் பார்த்தவர்கள் நிலையும் இதே தான். அப்படியானால் மிதிலைப் பெண்களில் யார் தான் இராமனின் அழகை முழுமையாகப் பார்த்தார்கள்?
“வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?” என்ற கேள்வியோடு நிறுத்துகிறார் கம்பர்.
மதனன் வரைந்த சீதை:
இந்த சுந்தர இராமனை மணக்கப் போகும் சீதை எப்படியிருந்தாள்? அழகுக்குத் தலைவன் மன்மதன். அவன் சீதையின் உருவத்தை வரைய நினைக்கிறான். எதை வைத்து வரையலாம் என்று யோசிக்கிறான். சீதையின் உருவத்தை வரையப் போவதால் சாதாரண வர்ணத்தால் வரைவதை விட அமுதத்தால் வரைந்தால் தான் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறான். அமுதத்தில் தூரிகையைத் தோய்க்கிறான். எப்படி வரைவது, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்று திகைக்கிறான். இதற்குள் பிரஷ்ஷிலிருந்த அமுதம் காய்ந்து போய் விடுகிறது. எனவே மீண்டும் அமுதத்தில் தோய்த்துக் கொள்கிறான். மறுபடியும் திகைப்பு! இதற்குள் தூரிகை காய்ந்து போய்விடுகிறது. சரி, மன்மதன் எப்பொழுது எப்படி வரைந்து முடித்தான்? மன்மதன் இன்னும் வரையவே ஆரம்பிக்கவில்லையே! ஏன்? சீதையின் அழகு அப்படிப் பட்டது!
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை
யாது?எனத்திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத வொண்ணாச்

சீதை அவள்! கன்னி மாடத்தில் சதகோடி மின்னல்கள் சேவிக்க ஒரு மின்னல் கொடி
போலிருந்தாள் என்று அவளை அறிமுகம் செய்கிறான் கம்பன்.
அனுமனின் பெருந்தெய்வம்:
இதே சீதை அசோக வனத்தில் எப்படியிருந்தாள்? சொல்லின் செல்வன் அனுமன் வாயிலாகவே கேட்போம்.
விற்பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்டேன்



பெண்களுக்குரிய ஒப்பற்ற சிறந்த குணங்கள் பொறுமை, கற்பு என்பவைகள். அக்குணங்கள் அனைத்தும் ஒன்றாக்கூடி பிராட்டியிடம் சேர்ந்து அவை பெருமை அடைந்தன. களி நடம் புரிந்தன.
தவம் என்பது தன்னைத்தான் கொண்டு ஒழுகும் நெறி. பெருந்தவம் என்பது கணவனுடைய வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து கற்பு நெறி வழுவாமல் இருப்பது. நற்பெருந்தவம் என்பது தன்னைப் பிறர் பிரித்த நிலையிலும், துன்புறுத்திய நிலையிலும் தனது குடிமை, பொறுமை கற்பு இவைகளுக்குக் குறைவு நேராமல் ஒழுகுவது. சீதா பிராட்டி அசோக வனத்தில் நற்பெருந் தவத்தளாக விளங்குவதைக் குறிப்பிடுகிறான் அனுமன். இப்படி விளங்கும் சீதையை தெய்வம் என்றே குறிப்பிடுகிறான்:
உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற
மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந் தெய்வம்!ஐயா!

ஒரு நல்ல பெண்மணி, மனைவி, மருமகள், மகள் என்ற உறவுமுறைகளுக்கு உரியவளாக இருப்பாள். சீதா பிராட்டி அந்தந்த உறவுமுறைகளெல்லாம் தன் மூலம் சிறப்பு அடையும் படியாக விளங்கினாள். மனைவி, மருமகள், மகள் என்ற அளவில் தன் கணவனுக்கும், மாமனாருக்கும், தந்தைக்கும் பெருமை சேர்க்கும் நிலையில் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். அது இப்போது சிறைவாழ்க்கையிலும் வெளிப்படுகிறது.  இதுவரை மற்றவர்களுக்கு உறவு முறையால் பெருமை சேர்த்த பிராட்டி எனக்குப் பெருந்தெய்வமாகக் காட்சி தந்தாள் என்கிறான் அனுமன்.
இப்படி பெருந்தெய்வமாகக் காட்சி தந்த சீதை எந்தச் சூழ்நிலையில் இருந்தாள்? கணவனிடமிருந்து   வஞ்சகமாகப் பிரிக்கப் பட்டு, தன்னந்தனியளாய், அரக்கியர் கூட்டங்களுக்கு நடுவே மாற்றான் சிறையில் வாடிக்கொண்டிருந்தாள். அந்த நிலையிலும் அவள் பெருந்தெய்வமாகக் காட்சியளிக்கக் காரணம் அவளுடைய அக அழகே. இராமனையே முழுமுதல் தெய்வமாகக் கொண்டிருந்த அனுமன், சீதாதேவியை ‘என்பெருந் தெய்வம்’ என்று இராமனிடமே சொல்கிறான் என்றால் அதற்குக் காரணம் சீதையின் அக அழகே.


அசோகவனத்திலே சீதை புகை படிந்த ஓவியம் போலிருந்தாள் என்பான் கம்பன். அனுமனின் நுண்ணறிவு அதையும் தாண்டி அவள் அக அழகைக் கண்டு பிடித்துவிடுகிறது.

அனுவாவி முருகன்





வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


மருதமலை முருகனைக் கண்டு கொள்ளும் பக்தர்கள் இந்த அனுவாவி முருகனை அறியாமையினால் கண்டு கொள்வதில்லை. மருதமலை முருகன் வீற்றிருக்கும் அதே மலையின் நேரெதிரே அடுத்த பக்கத்தில் பெரிய தடாகம் எனும் ஊரில் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் பின்னனியில் ஒரு சுவாரசியமான புராணக்கதை உண்டு. சஞ்சீவி மலையினைத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது ஏற்பட்ட தாகத்தினால் அனுமான் இந்த மலையில் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவரது தாகத்தினை தவிர்க்க அங்கு தண்ணீர் இருக்கவில்லை. உடனே அவர் முருகக் கடவுளை வேண்ட அவர் தனது வேலினால் மலையின் ஒரு இடத்தில் துளைக்க நீர் ஊற்று தோன்றி அனுமானது தாகத்தினை தணித்திருக்கிறது. அனுமானிற்கு வாவி உருவாக்கி தாகம் தணித்த இந்த இடம் அனுவாவி என்று அழைக்கப் படுகிறது.
கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையிலிருந்து கொஞ்சம் தள்ளி பெரிய தடாகம் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இந்த கோவில். கோவை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு சிறிய கோவில்தான். இன்னும் சொல்லப் போனால் கோவையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது.

 இயற்கை எழில் சூழ்ந்த அழகான அமைதியான சூழலில் மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலை சுமார் 500 படிகளை ஏறி அடையலாம். மாலைவேலையில் இங்கு சென்றால் பல்வேறு பட்ட பறைவைகளின் கானங்களை கேட்டு மகிழலாம். கோவை முழுவதற்குமே இந்த பகுதிகளில் இருந்துதான் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. முன்பெல்லாம் மிகவும் பசுமையான மரங்களுடன் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக இருந்த இப்பகுதி தற்போது செங்கல் காலவாய்களின் வருகைக்குப்பின் மாசடைந்து புகைமூட்டத்துடன் எப்பொழுதும் காணப்படுகிறது.
http://kadalodi.baranee.net

அனுவாவி முருகன்









மருதமலை முருகனைக் கண்டு கொள்ளும் பக்தர்கள் இந்த அனுவாவி முருகனை அறியாமையினால் கண்டு கொள்வதில்லை. மருதமலை முருகன் வீற்றிருக்கும் அதே மலையின் நேரெதிரே அடுத்த பக்கத்தில் பெரிய தடாகம் எனும் ஊரில் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் பின்னனியில் ஒரு சுவாரசியமான புராணக்கதை உண்டு. சஞ்சீவி மலையினைத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது ஏற்பட்ட தாகத்தினால் அனுமான் இந்த மலையில் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவரது தாகத்தினை தவிர்க்க அங்கு தண்ணீர் இருக்கவில்லை. உடனே அவர் முருகக் கடவுளை வேண்ட அவர் தனது வேலினால் மலையின் ஒரு இடத்தில் துளைக்க நீர் ஊற்று தோன்றி அனுமானது தாகத்தினை தணித்திருக்கிறது. அனுமானிற்கு வாவி உருவாக்கி தாகம் தணித்த இந்த இடம் அனுவாவி என்று அழைக்கப் படுகிறது.
அனுவாவி முருகன் கோவில் Anuvavi Temple
கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையிலிருந்து கொஞ்சம் தள்ளி பெரிய தடாகம் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இந்த கோவில். கோவை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு சிறிய கோவில்தான். இன்னும் சொல்லப் போனால் கோவையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது.

இயற்கை எழில் சூழ்ந்த அழகான அமைதியான சூழலில் மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலை சுமார் 500 படிகளை ஏறி அடையலாம். மாலைவேலையில் இங்கு சென்றால் பல்வேறு பட்ட பறைவைகளின் கானங்களை கேட்டு மகிழலாம். கோவை முழுவதற்குமே இந்த பகுதிகளில் இருந்துதான் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. முன்பெல்லாம் மிகவும் பசுமையான மரங்களுடன் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக இருந்த இப்பகுதி தற்போது செங்கல் காலவாய்களின் வருகைக்குப்பின் மாசடைந்து புகைமூட்டத்துடன் எப்பொழுதும் காணப்படுகிறது.

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

தேன்தமிழ்
http://www.newlankasri.com/ta/

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.
பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.
இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.
இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.
இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

http://www.newlankasri.com

வியாழன், டிசம்பர் 24, 2009

ஜோதிடத்தின் எல்லைகள்


வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இரட்டைப் பிறவிகளின் ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறது.  ஆனால் அவர்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இல்லையே!" என வினவி இருந்தார். மற்றொருவர் 'சுனாமியில் பல ஆயிரக் கணக்கானவர்கள் காலமானார்களே! அவர்கள் எல்லோருக்கும் மாரக திசையா? " என வினவி இருந்தார். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறோம்.


நாம் ஏற்கனவே இரட்டைப் பிறவிகளைப் பற்றி எழுதிருக்கிறோம்.  சில நிமிட இடைவெளியில் ஒரே தாய், தந்தையருக்குப் பிறந்தவர்கள் இரட்டைப் பிறவிகள். ராசி, நவம்சம் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  பொதுவாக ஜாதகம் கணிக்கும்போது ராசி, நவாம்சம் இரண்டை மட்டும் தான் கணித்துக் கொடுக்கிறார்கள்.  நவாம்சம் என்பது ராசியை ஒன்பது கூறுகளாகப் பிரிப்பது. இதைத்தவிர பாவம், திரேக்காணம், திரிசாம்சம், சப்தாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், சஷ்டியாம் சம் ஆகிய பல சக்கரங்களைப் போடத்தான் வேண்டும்.  சஷ்டியாம்ச்சம் என்பது ஒரு ராசியை அறுபதாகப் பிரிப்பது.  இந்த அம்சங்களெல்லாம் இரட்டையர் ஜாதகத்தில் மாறும்.ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

தவிரவும் "Sub-lord" theory  இரட்டையர் பிறப்புக்களில் அவர்கள் வாழ்க்கை மாறி இருப்பதற்குக் காரணத்தை விளக்குகிறது.  ஒர் நட்சத்திரத்ததை அதாவது 13 டிகிரி 20 நிமிடத்தை ஒன்பதாகப்பிரித்துப் பலன் சொல்வது. லக்கினத்தை ஸ்புடம் செய்வது போன்று 12 பாவங்களையும் ஸ்புடம் செய்யும்போது ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு  Sub-lord" - ன் கீழ் வருகிறது. சில நிமிட இடை வெளியில் பிறந்தோருக்கு இந்த "Sub-lord" நிச்சயம் மாறும். 
நமக்கு நன்றாகத் தெரிந்த இரட்டையர்கள் ராமசாமி முதலியார், அவர் சகோதரர் லட்சுமணசாமி முதலியார் (Former Vice-Chancellor of Madras University). இவர்கள் சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். ஒருவர் வழக்கறிஞர்; மற்றொருவர் மருத்துவர். அவர்கள் ஜீவனத்தைக் குறிக்கும் வீட்டின் Sub-lord  ஒருவருக்கு குருவாகவும், மற்றொருவருக்கு சூரியனாகவும் இருந்ததே காரணம்.  இந்த இரட்டையர்களுக்கு வாழ்க்கை வித்தியாசத்தை  "Sub-lord" theory  தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இந்த Sub-lord theoryஐப் பற்றி நாம் அதிகம் விளக்கப் போவதில்லை. அதை இங்கு விளக்குவது நமது நோக்கமல்ல. இரட்டையர்களின் வாழ்க்கை முறை வித்தியாசப் படுவதற்குக் காரணம் உண்டு என்று விளக்குவதற்காகவே அதைப் பற்றி எழுதினோம்.
ஒரே ஊரில் ஒரே நேரத்தில் ஒரு பணக்காரருக்கும் ஒரு ஏழைக்கும் பிறந்த இரு குழந்தைகள் ஜாதகம் ஒன்றாக இருந்த போதிலும், வாழ்க்கை முறையில் வித்தியாசம் இருப்பதற்குக் காரணத்தை நாம் நமது பாடத்தில் எழுதி இருக்கிறோம்.  சந்தேகம் இருப்பவர்கள் அதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் மாரக தசை வந்து விட்டதா? இரு மற்றொரு வாசகரின் கேள்வி. ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து ஒருவருக்கு தீர்க்காயுள் ஜாதகமா? அல்லது மத்திய ஆயுள் ஜாதகமா? அல்லது அற்பாயுள் ஜாதகமா? எனக் கூறுகிறோம். தீர்க்காயுள் ஜாதகம் என்று கூறப்பட்டவர் மேற்சொன்ன இயற்கை சீற்றங்களினால் மரணம் எய்தலாம். அப்படியானால் ஜோதிடம் பொய்த்து விட்டதா? 
ஒரு நாட்டின் நடப்புக்களுக்கு உட்பட்டதுதான் நம் அனைவரின் தனிப் பட்ட வாழ்க்கை. ஒரு நாட்டின் நடப்புக்களைப் பற்றிக் கூறுவது  "Mundane Astrology "  என்பது.  இது ஒரு நாட்டில் எப்போது சண்டை வரும், பூகம்பம் வரும், வெள்ளம் வரும்; நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? என்பது போன்ற நாட்டு நடப்புக்களைக் கணிப்பது இந்த Mundane Astrology. This is another branch of Astrology. தனிப்பட்ட நபர்களின் ஜாதகம் வேறு, இந்த Mundane Astrology வேறு. விதிகள் எல்லாமே வேறு.  இதைக் கையாளுபவர்கள் மிகச் சிலரே.  அனேகமாக எல்லாருமே தனி நபரின் ஜாதகத்தை அதாவது  Natal Astrology - ஐத் தான் கையாளுகிறார்கள். நம் தனிப்பட்டவர்களின் ஜாதகமானது இந்த  Mundane Astrology -  க்கு உட்பட்டதே. ஒரு நாட்டில் சண்டையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ அல்லது பூகம்பத்தினாலோ மக்கள் மடிய வேண்டுமென்றால் மடியத்தான் வேண்டும்.  அதிலிருந்து தப்பிக்க முடியாது. Mundane Astrologyக்கு உட்பட்டதே  Natal Astrology. நமக்கு மட்டும் தீர்க்காயுள் என்று தப்பிக்க முடியாது.  There is limitation to Astrology.  Within the limitation we can predict properly.
இந்த எல்லை அழிவுக்கு மட்டும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கும்தான். நமது நாட்டின் பொருளாதாரம் மிக நல்ல நிலையில் இருக்கிறதே. அதனால் நாம் அனைவரும் பயன் பெறவில்லையா? எவ்வளவுபேர் அயல் நாடுகளில் குறிப்பாக அமெரிக்கவில் பணிபுரிகின்றனர். அதனால் பொருளாதாரம் வளரவில்லையா? கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவுபேர் அமெரிக்கா சென்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். அதனால் நாட்டையும் வளர்த்துள்ளனர். இந்த வளர்ச்சி இதற்கு முன் இருந்ததா? இவ்வளவு பேர் முன்புவெளிநாடு சென்றார்களா?
ஆக ஒரு நாட்டின் நடப்புக்களை Mundane Astrology  தெரிவிக்கின்றது. அதற்கு உட்பட்டதுதான் தனி மனிதரின்  Natal Astrology.   ஆகவே எல்லாவற்றையும்போல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு.  Within the limitation we can predict.

ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com

பஞ்சாங்கங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


1. திருகணிதப் பஞ்சாங்கம்.
2. வாக்கியப் பஞ்சாங்கம். 
திருகணிதத்திற்கு முன்பு வந்தது வாக்கியப்பஞ்சாங்கம். முதன்முதலில் கிரகங்களின் வேகம், சுற்றும் பாதை ஆகியவற்றைக் கண்டறிந்த நமது முனிவர்கள் அவற்றை ஸ்லோகங்களாக வடித்தனர். இந்த ஸ்லோகங்களின் அடிப்படியில் கணிக்கப்பட்டதுதான் வாக்கியப் பஞ்சாங்கம்.
அதற்குப் பிறகு வந்த நமது பெரியவர்கள் அதில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள். சந்திரன் இழுப்பு சக்தி, பூமியின் இழுப்பு சக்தி, மற்றும் சூரியனின் இழுப்பு சக்தி ஆகியவற்றை விடக் குறைவாக உள்ளதால்  அடிக்கடி அவர்களின் ஈர்ப்பு சக்திக்குட்பட்டு தன் பாதையில் வளைந்து நெளிந்து செல்கிறது.  அதன் பாதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.  அதன் காரணமாக அதன் பாதையில் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன.  இவ்வித்தியாசங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது திருகணிதப் பஞ்சாங்கம். 
ஆகவே திருத்தப்பட்ட பஞ்சாங்கம் திருகணிதப் பஞ்சாங்கம். திருகணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் அதிக பட்சமாக 6  3/4  மணி நேரம் வரையில் வித்தியாசம் ஏற்படலாம்.  இந்த நேர வித்தியாசத்தால் நட்சத்திரங்கள் மாறும்.  இருப்புதசையில் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். 
இன்றைய நாட்களில் கணிதம் மிக வேகமாக வளர்ந்துள்ளது.  துல்லியமாகச் சந்திரனில் நாம் இறங்க முடியும்.  இவ்வாறு இன்றைய நாட்களில் உள்ள கணக்கும், திருகணித ரீதியிலான கணிதமும் ஒரே மாதிரியாக இருப்பதனால் திருகணிதம்தான் ஜோதிடத்தில் கையாள முடியம்.   Drik System is astronomically and mathematically correct. ஆகவே ஜோதிடம் பயில உள்ள நமது நேயர்கள் திருகணித முறையையே கையாள வேண்டுமென கூறிக் கொள்கிறோம்.

 ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com

தமிழ்ப்புத்தாண்டு குழப்பங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இது வரையில் ஏப்ரல் 14 - ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது.  இந்த ஆண்டு முதல் பொங்கல் திருநாள்  தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.   இது அரசாங்கத்தின் ஆணை.  இவ்வாறு அரசு புதிய ஆணை விடுத்ததற்கான காரணங்களைப் பார்ப்போம்.
சுமார் 75  ஆண்டுகளுக்கு முன்பு  மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி  தமிழுக்கென்று தனித் தமிழ்புத்தாண்டு வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.  தற்போது பழக்கத்திலுள்ள பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் ஆண்டுகள் ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படுகின்ற ஆண்டுகள். தவிரவும் அவை வட மொழிப் பெயர்கள்.  தமிழ்ப் பெயர்கள் அல்ல; அவைகளுக்குத் தொடர்ச்சியாக எண்கள் கிடையாது. இவ்வாறாகப் பல காரணங்களால் தனித் தமிழ்ப் புத்தாண்டு வேண்டுமென்று முடிவு செய்து பொங்கல் திருநாளான  தை முதல் நாளன்று திருவள்ளுவர் பிறந்தார் என்று கணக்கிட்டு  அன்று புத்தாண்டு கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.  திருவள்ளுவர் ஏசு கிறிஸ்துவுக்கு சுமார் 35 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிடப்பட்டு அந்த ஆண்டு முதல்  தொடர்ச்சியாக ஆண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு ஆண்டு எண்ணைக் குறிக்கிறார்கள்.  இத்தகைய 75 ஆண்டுகால
முடிவுக்குத்தான் தற்போதுள்ள அரசு  செயல் வடிவம்  ஆணையாகக் கொடுத்துள்ளது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மாதங்கள் என்று உட்பிரிவு எதுவும் கிடையாது.
ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டை ஜோதிடர்கள் கூறும் புத்தாண்டு என்று கூறிய தமிழ் அறிஞர்கள் ஒன்றை கருத்தில் கொள்ளவில்லை.   பொங்கல் திருநாளும் ஜோதிடர்கள் கணக்குப்படியே கொண்டாடப்படுகிறது.  சூரியன் மகரத்திற்கு வரும் முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.  மகரத்திற்கு என்று வருகிறது என்பதை ஜோதிடர்கள்தான் தீர்மானிக்கின்றனர். சில ஆண்டுகளில் ஜனவரி 13 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 15 ம் தேதியும் வருகிறது.  ஓரே நாளில் நிரந்தரமாக வருவது இல்லை.  டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதிலே எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் பொங்கல் பண்டிகை அப்படி அல்ல. ஜோதிடர்கள் என்று மகரராசியில் சூரியன் பிரவேசிக்கிறது என்று கூறுகிறார்களோ அன்றுதான் பொங்கல் பண்டிகை. ஆக தற்போது அரசு அறிவித்துள்ள புத்தாண்டும் ஜோதிடர்களின் கணிதத்திற்குள்தான் அமைகிறது.
ஹிந்து சித்தாந்தத்தின்படி ஓர் தமிழ் ஆண்டு என்பது சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசம் செய்யும் போது ஆரம்பித்து, ரேவதி 4 ம் பாதத்தை விட்டுச் செல்லும்போது உண்டான இடைப்பட்ட காலமேயாகும். இதை ஒர் சூரிய ஆண்டு என்றும் குறிப்பிட லாம்.  ஏனெனில் சூரியனின் வான மண்டலத்தை இந்தக் காலத்தில்தான் ஒருமுறை சுற்றி வருகிறது.
இந்தக் கணித முறையை வானவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது தவறான கணித முறை என்றுதான் கூறுகின்றனர்.   அவர்கள் கணிதப்படி ஒர் சூரிய ஆண்டு என்பது  மார்ச் 21 ம் தேதி ஆரம்பித்து அடுத்த ஆண்டு  மார்ச் 20 ம் தேதி வரையில் உண்டான இடைப்பட்டகாலமேயாகும்.  மார்ச் 21 ம் தேதிதான் சூரியன் Vernal Equinox என்ற இடத்திற்கு வருகிறார்.  அப்போது பகல் பொழுதின் அளவும், இரவு நேரத்தின் அளவும் சரிசமமாக இருக்கும்.  இதை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.  அதில் “அகஸ்” என்ற கட்டத்தின் கீழ் 30 நாழிகை எனப் போட்டு இருப்பார்கள். அகஸ் என்றால் பகல் பொழுதின் அளவு எனப் பெயர். பகல் பொழுது 30 நாழிகை என்றால் இரவுப் பொழுது 30 நாழிகை தானே.  ஆக அவர்களுக்கு ஒரு சூரிய ஆண்டு என்பது மார்ச் 21 ம் தேதிதான் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு முறையைத்தான் மேல் நாட்டவர் தங்கள் பருவகாலத்தைக் கணிப்பதற்கு உபயோகப் படுத்துகின்றனர்.  
அவர்கள் பருவகாலத்தை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். .
Vernal Equinox  -  March, 21st  - Beginning of the Spring Season every year. (மேஷத்தில் சூரியன் பிரவேசிக்குக் காலம்)
Autumnal Equinox -  23rd September - அன்றும் பகல் பொழுதின் அளவும் இரவின் அளவும் சரிசமமாக இருக்கும் ( செப்டம்பர் 23 ம் தேதி சூரியன் துலாத்தில் பிரவேசிக்கும் காலம்)
Summer Solstice -  ஜூன் 22 ம் தேதி.  அவர்களின் வேனிற்காலம் ஆரம்பிக்கும் காலம். (கடகத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம்)
Winter Solstice -   டிசம்பர் 22 ம் தேதி  அவர்களின் குளிர்காலம். (மகரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம்).
வானவியலின்படி வான மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தின் ஆரம்ப முனை பின் நோக்கிச் செல்கிறது.  இதை நமது ஜோதிட கிரந்தங்களும் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் நமது ஹிந்து சிந்தாந்ததின்படி வான மண்டலத்தின் ஆரம்ப இடம் அஸ்வனி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம்.  இது பின் நோக்கி நகருவதில்லை.  இது நிலையானது. வானவியல்படி வான மண்டலம் நகரக்கூடியது. இதைத்தான் மேல் நாட்டவர்கள் தங்கள் ஜோதிடத்திற்குப் பயன் படுத்துகின்றனர்.
இதையெல்லாம் நாம் எதற்கு இங்கு எழுதுகிறோமென்றால் அரசு அறிவித்துள்ள புத்தாண்டும் ஹிந்து சித்தாந்தத்திற்கு உட்பட்டதே.  வானவியல் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு அறிவிக்கப்படவில்லை என்பதுதான். 
சிலர் பிறந்த நாள் கொண்டாடுவர். ஆங்கிலத் தேதியை அனுசரித்துக் கொண்டாடுவர். பின்பு நட்சத்திரத்தின்படி கொண்டாடுவர்.  ஆக இரண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவர். அதைப்போல் நாம் புத்தாண்டை பொங்கல் அன்றும் கொண்டாடலாம்.  அதாவது அரசு அறிவித்துள்ள பண்டிகையாகக் கொண்டாடலாம்.  பின்பு ஹிந்து சிந்தாந்ததின்படி ஏப்ரல் மாதத்திலும் கொண்டாடலாம்.  நமது தமிழ்த் தாய்க்கு இரண்டு நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சிதானே!  ஆனால் ஹிந்துக்களின் பண்டிகையாக ஏப்ரல் மாதத்தில் மட்டுமே கொண்டாட முடியும்.

ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com] 
http://www.tamiloviam.com

நாள்காட்டி ஜோதிடம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நமது பாரம்பரிய ஜோதிடத்தில் வருங்காலத்தைப் பற்றிக் கணக்கிட தசா முறையைப் பின் பற்றுகிறோம். ஆனால் மேலை நாட்டவர் ஜோதிடத்தில் இந்த தசா கணித முறை கிடையாது.   "Progression"  என்ற முறையைக் கையாளுகின்றனர். இது கிரக பார்வையின் அடிப்படியிலானது. 
நாம் கோச்சார பலன்கள் கூறுகின்றோமல்லவா?  அதற்கு ஜென்ம ராசிச் சக்கரத்திலுள்ள சந்திரனின் நிலையைக் கொண்டுதானே கூறுகின்றோம்.  ஆனால் மேலை நாட்டவர்கள் சந்திரனின் நிலையைக் கொண்டு கூறுவது இல்லை;  மாறாக சூரியனின் நிலையைக் கொண்டு கூறுகின்றார்கள். 
நாம் தாயாரைப் பற்றி 4-ம் இடத்தையும், தகப்பனாரைப் பற்றி 9-ம் இடத்தை வைத்தும் கூறுகின்றோமல்லவா?  அவர்கள் 4-ம் இடத்தை தகப்பனாருக்கும், 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடான 10-ம் இடத்தை தாயாருக்கும் அளித்துள்ளார்கள்.  நமது அனுபவப்படி தகப்பனாரைப் பற்றி அறிய 9-ம் இடமே சரியான இடம் என்பது நமது கருத்து.
ஒரு கிரகம் நல்லதா? அல்லது கெட்டதா? என்று எப்படிக் கூறுவது. நமது ஜோதிடத்தில் கிரக பலத்தைக் கணக்கிட "ஷட் பலம்" என்ற முறையைக் கையாளுகின்றார்கள். ஷட்பலம் என்றால் 1. ஸ்தான பலம், கிரக திருஷ்டி பலம் 2. கால பலம் 3. அயன பலம், கிரக யுத்த பலம், 4. நைசிர் கிரக பலம், 5. திக்குப் பலம் 6. சேஷ்டாபலம் ஆகியன அடங்கும்.  இவைகளையெல்லாம் கண்டு பிடிப்பது மிகவும் கடினமான காரியம். மிகவும் உழைத்து பலன்களை அறிய வேண்டும்.  இவ்வளவு கணக்கு, வழக்குகள் மேலை நாட்டவர் கையாளவில்லை. 
ஜோதிடத்தில் பல கிளைகள் உண்டு.  எல்லாவற்றையும் அறிந்தவர் எவரும் இலர். மருத்துவ ஜோதிடம் என்ற கிளை உண்டு.  இதில் ஒவ்வொரு கிரகமும், ராசியும் உடலின் சில உறுப்புக்களைக் குறிக்கும். கிரக அமைப்புக்களுக்கு  ஏற்றவாறு உடல் நிலையில் பாதிப்புக்கள் உண்டாகின்றன.  குருவானவர், உடல் உள்ளுருப்பில்  Liver  ஐக் குறிக்கிறார்.  சனிதான் மந்தமானவர் ஆயிற்றே.  குருவுடன் அவர் சேர்ந்தால்  Liver -  சம்மந்தமான உபாதைகளை அவருக்கு உண்டாகும். குரு, ஆயுள் காரகனான சனியுடன் சேர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதெல்லாம் ஜாதகரின் பொதுப் பலன்களைக் குறிப்பிடும்போதுதான். மருத்துவ ஜோதிடத்தில் அதே சேர்க்கையை வேறு விதமாகக் கூற வேண்டியதுள்ளதல்லவா?
உலக நாடுகள் சம்மந்தமான ஜோதிடம்:- எந்த நாட்டில் என்ன நடக்கும் என்று கூறுவது தான் இந்த ஜோதிடம்.  எப்போது வெள்ளம் வரும், எங்கே சண்டை வரும், எங்கே பஞ்சம் வரும் என்பதன வெல்லாம் இத்ல் மூலம் கூறுவர். ஆனால் இதன் மூலம் கூறும் பலன்கள் நிச்சமமற்ற தன்மையாக இருக்கின்றன. உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் 12 ராசிக்குள் அடக்கி இருக்கின்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் பல நாடுகள் உண்டு.  ஆக இந்த நாட்டில்தான் இவ்வாறு நடக்குமென்று கூறுவது  நிச்சயமற்றதாகி விடுகிறது.  ஆகவே பலர் இதில்  கருத்துச் சொல்ல விரும்புவதில்லை.
வானிலை ஜோதிடம்:-  கிரக அமைப்பை வைத்துச் வானிலையைக் கூறுவது.  இப்போதெல்லாம் வானிலை மையங்கள் வந்த பிறகு இதற்குத் தேவையில்லாது போய்விட்டது.  இருப்பினும் இதைப் பலனாகச் சொல்பவர்களும் மிக, மிக சொற்பம். 
நாள்காட்டி  ஜோதிடம் : இதை ஆங்கிலத்தில்  Electional Astrology  என்று கூறுவர்.  அதாவது திருமணம் எப்போது செய்ய வேண்டும், வீடு கட்ட எப்போது மனை பூஜை செய்ய வேண்டும் என்பது போன்றவைகளுக்கு நாட்கள் தேர்ந்தெடுப்பது. இது பெரும்பாலும் நாட்கள் தேர்ந்தெடுப்பது சம்மந்தப் பட்டதே.
சகுனங்கள், நிமித்தங்கள் சம்மந்தப்பட்ட ஜோதிடம்:- இதற்கு ஜாதகமே தேவையில்லை.  கேள்வி கேட்க்கும் சமயத்தில் நிகழும் சகுனங்கள் அல்லது நிமித்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஜோதிடத்தை நமது பெரியவர்களே அங்கீகாரம் செய்துள்ளனர்.  நாமும் பல சமயங்களில் இத்தகைய ஜோதிடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளோம்.  சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பட்டிமன்ற நிகழ்ச்சியில் சகுனங்களைக் கேலி செய்து நகைச்சுவையாகக் கூறினார், நடுவர் என்றழைக்கப் பட்டவர்.
ஒருவர் வெளியில் செல்லும்போது குறுக்கே பூனை சென்றதாம்.  பூனை குறுக்கே சென்றால் அது நல்லதல்லவே என்று அவர் நினைத்தாராம்.  அப்போது குறுக்கே சென்ற பூனை ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டதாம். ஆகவே கெடுதல் பூனைக்குத்தானென்றும்,  மற்றவர்களுக்கு இல்லையென்றும் நகைச்சுவையுடன் கூறினார்.  இது நகைச்சுவைக்குத்தான் உதவும். உண்மை இதில் இல்லை.  சகுனங்களும், நிமித்தங்களும் எதிர்காலத்தில் நடப்பவைகளை முன்கூட்டியே அறிவிக்கும் அசிரீரிகள்.  இதில் உண்மை நிச்சயம் உண்டு.   நகைப்புக்கு இடமில்லை.

ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com

படைப்புவாதமும் பரிணாமக் கோட்பாடும்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
‘‘டார்வினின் புத்தகம் மிக முக்கியமானது. வரலாற்றில் நிகழும் வர்க்கப் போராட்டத்திற்கான இயற்கை அறிவியல்பூர்வமான அடிப்படையை அது எனக்கு வழங்குகிறது.’’
- கார்ல் மார்க்ஸ்
‘‘உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’
- எங்கெல்ஸ்
மனித குல வரலாற்றில் மனிதர்களின் சிந்தனைப்போக்கின் மீதும் அதன் விளைவாக வரலாற்றின் மீதும் மிகுந்த செல்வாக்கு செலுத்திய நூறு பேர் கொண்ட ஒரு பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் நிச்சயம் சார்லஸ் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கடந்த நானூறு வருட கால நவீன அறிவியல் வரலாற்றில் தோன்றிய அதிமுக்கியமான பத்து அறிவியலாளர்களைக் கொண்ட எத்தனை மாறுபட்ட பட்டியல்கள் தயாரிக்கப்பட்டாலும் அவை அனைத்திலும் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற ஒரு சில அறிவியலாளர்களின் செல்வாக்குடன் மட்டுமே ஒப்பிடத்தகுந்தது டார்வினின் செல்வாக்கு. நியூட்டனின் கண்டுபிடிப்புகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டு அறிவியல் உலகில் ஒரு மாபெரும் புரட்சியையே கொண்டுவந்தன. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் பிரபஞ்சத்தைப் பற்றி அதுகாறும் அறிவியலாளர்கள் கொண்டிருந்த பார்வையையே முற்றிலுமாய்ப் புரட்டிப்போட்டது. ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர், ஹைசன்பெர்க், ஷ்ராடிங்கர் போன்றோரால் உருவான குவான்டம் இயற்பியலின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகிலேயே பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின (குவான்டம் அறிவியலின் உண்மைகளை விளங்கிக்கொள்ளும் விதத்தில் ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போருக்கும் இடையில் மிக அடிப்படையான முரண்பாடு நிலவியது).
ஆனால் இவையெதுவுமே மத நம்பிக்கைகளை, கடவுளின் இருப்பை நேரடியாகக் கேள்விக்குட்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மத நம்பிக்கையாளர்கள் அப்படிக் கருதவில்லை. பூமியானது நாம் நினைப்பதுபோல் பிரபஞ்சத்தின் மையம் அல்ல மாறாக அது சூரியனைச் சுற்றிவரும் பல கோள்களுள் ஒன்று என்று அறிவியல்பூர்வமாக கலிலியோ 17ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் பைபிளில் கூறப்படுவது போல் முதல் நாளன்று வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இறுதியாக ஆறாம் நாளன்று தனது சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுத்து ஒரு செல் உயிரியிலிருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவனே மனிதன் (இந்தப் பரிணாம வளர்ச்சி நடந்தேறப் பல கோடி ஆண்டுகள் பிடித்தன) என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் டார்வின் 19ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் மதத்தின் - குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் - அடிப்படைகளை உலுக்கின. கோபர்நிகஸின் தத்துவார்த்தக் கோட்பாட்டை அறிவியல்ரீதியாக முன்வைத்து 1632ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘‘இரு தலையாய உலக அமைப்புமுறைகள் பற்றிய உரையாடல்’’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்னும் புத்தகத்திற்காக போப் மற்றும் கத்தோலிக்க மதத்தின் Inquistion அமைப்பால் கலிலியோ விசாரிக்கப்பட்டார். கலிலியோவே தனது கோட்பாட்டை மறுக்கும்படி செய்யப்பட்டார். அப்படிச் செய்யாத பட்சத்தில் கொளுத்தப்படுவார் என்றும் அச்சுறுத்தப்பட்டார். அதற்குப் பணிந்த கலிலியோவிற்கு வாழ்நாள் வீட்டுக்காவல் தண்டனை 1633இல் வழங்கப்பட்டது. தனது எஞ்சிய வருடங்களைக் கலிலியோ வீட்டுக்காவலில் கழித்தார். 359 வருடங்கள் கழித்து, 1992இல் போப் ஜான் பால் இதற்கு வருத்தம் தெரிவித்து கலிலியோவின் கருத்தே சரி என்றும் ஒப்புக்கொண்டார்.
1859, நவம்பர் 22இல் டார்வினின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்: அல்லது, வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிறப்பான இனங்கள் பாதுகாக்கப்படுவது’’ (The Origin of Species by Means of Natural Selection: Or, the Preservation of Favored Races in the Struggle for Life) என்னும் புத்தகம் வெளியானது. ஆனால் கலிலியோவிற்கு நேர்ந்த கதி டார்வினுக்கு நேரவில்லை. மதவாதிகள் திருந்தியிருந்ததல்ல இதற்குக் காரணம். மாறாக ஐரோப்பிய அறிவொளிக் காலகட்டத்தில் (18ஆம் நூற்றாண்டு) மத நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவிற்கும் இடையில் நடந்த கடும் போராட்டத்தில் மனிதப் பகுத்தறிவின் மேன்மை நிறுவப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டதுமே இதற்குக் காரணம். கோபர்நிகஸ் புரட்சியைப் போலவே டார்வினின் கண்டுபிடிப்பும் நாத்திகவாதத்திற்குப் பெரும் வலுசேர்த்தது. டார்வின் பிறப்பதற்கு முன்பு ஒருவர் நாத்திகவாதியாக இருப்பது என்பது மிகக் கடுமையான சவால். ஆனால் டார்வினின் கண்டு பிடிப்பு அதை இன்று எளிதான காரியமாக ஆக்கியிருக்கிறது என்று புகழ்பெற்ற அறிவியலாளரும் நாத்திகவாதியுமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதில் உண்மை இருக்கிறது என்றாலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாத்திகவாதமானது மிக வலுவான அறிவியக்கமாக வரலாற்றில் எப் போதுமே இருந்துவந்திருக்கிறது. இந்தியத் தத்துவ மரபில் சார்வாகத்தின் பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதைத் தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நிறுவியிருக்கிறார். இதில் ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவெனில் டார்வின் தன்னை நாத்திகவாதியாக ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. நாத்திகம் அறிவாளிகளுக்கு உகந்த விஷயம் என்று கருதிய டார்வின் சாதாரண மக்களுக்கு அது இன்னும் ஏற்புடையதாக இல்லை என்று கருதினார். ஆகவே தான் நாத்திகத்திற்கு ஆதரவாகப் பேசுவது தனது குடும்பத்தினரையும் வேறு பலரது மனங்களையும் புண்படுத்தும் என்று கருதிய டார்வின் தன்னை ஒரு ஐயவாதி (Agnostic) என்றே கூறிக்கொண்டார். மதம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதை எப்போதுமே தவிர்த்துவந்தார். கார்ல் மார்க்ஸின் மகளான எலியனோரின் காதலன் எட்வர்ட் எவ்லிங்கிற்கு டார்வின் எழுதிய கடிதத்தில் இது வெளிப்படுகிறது. மதம் பற்றிய அவரது கருத்துகளை இக்கடிதம் வெளிப்படுத்துவதுடன், பல காலமாக நம்பப்பட்டுவந்த கார்ல் மார்க்ஸ் - டார்வின் சம்பந்தமான ஒரு சர்ச்சைக்கும் வழிவகுத்தது. மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பியதாகவும் ஆனால் அதை டார்வின் மறுத்துவிட்டார் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் உண்மை என்னவெனில் எவ்லிங் தனது The Students’ Darwin என்னும் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பி அதற்கு அனுமதி கோரியிருந்தார். அப்புத்தகத்தில் தனது தீவிர நாத்திகவாதக் கருத்துகளை எவ்லிங் கூறியிருந்த காரணத்தால் அது தனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மென்மையான முறையில் டார்வின் மறுத்துவிட்டார். 1895இல் எலியனோர் தனது தந்தைக்கு வந்த கடிதங்களை ஆவணப்படுத்திய போது தனது காதலருக்கு டார்வின் எழுதிய கடிதத்தை அவற்றுடன் தவறுதலாகச் சேர்த்துவிட்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.
மதத்துடன் டார்வினுக்கு இருந்த உறவை அக்கடிதம் (13.10.1880இல் எழுதப்பட்டது) மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் அபூர்வமான ஆவணம் என்பதால் அதை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது:
அன்புள்ள ஐயா,
உங்கள் அன்பான கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்திற்கும் நான் மிக்கக் கடன்பட்டுள்ளேன். எனது எழுத்துக்கள் மீதான உங்களது கருத்துகளை எந்த வடிவத்திலும் வெளியிட எனது அனுமதி தேவையில்லை. அனுமதி தேவையற்ற ஒரு காரியத்திற்கு அனுமதி வழங்குவது நகைப்பிற்குரியது. எனக்குத் தெரியாத ஒரு விவகாரத்தைப் பற்றிய வெளியீட்டிற்கு எனது அங்கீகாரத்தை இது வழங்கும் என்பதால் அந்தப் புத்தகம் எனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மறுக்க விரும்புகிறேன் (என்னைக் கௌரவிக்க நினைத்ததற்கு நன்றி கூறுகிறேன்). மேலும், எல்லா விவகாரங்களைப் பற்றியுமான சுதந்திரச் சிந்தனையை நான் தீவிரமாக ஆதரிப்பவன் என்ற போதிலும் கிறித்துவத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிரான வாதங்கள் பொதுமக்கள்மீது பெரிதாகத் தாக்கம் எதையும் ஏற்படுத்தமாட்டா என்று எனக்குத் தோன்றுகிறது (இது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம்). அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்கள் படிப்படியாக அறிவுத் தெளிவைப் பெறுவதன் மூலமே சுதந்திரச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல இயலும். ஆகவே மதத்தைப் பற்றி எழுதுவதை நான் எப்போதுமே தவிர்த்து வந்திருக்கிறேன். எனது பணியை அறிவியலுடன் மட்டும் நிறுத்திக்கொண்டேன். மதத்தின் மீதான நேரடியான தாக்குதலுக்கு நான் உதவினால் அது என் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையைத் தரும் என்ற காரணத்தால் இத்தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். உங்கள் வேண்டுகோளை மறுப்பதற்காக வருந்துகிறேன். எனக்கு வயதாகிவிட்டது, உடலில் வலு இல்லை மற்றும் அச்சிடப்பட்ட தாள்களைப் பிழை பார்ப்பது என்னை மிகுந்த சோர்வுக்குள்ளாக்குகிறது.
உங்கள் உண்மையுள்ள
சார்லஸ் டார்வின்.
டார்வினின் கோட்பாடுகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ, மத நிறுவனங்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஆனால் தனது இளமைக் காலத்தில் தான் ஒரு கிறித்துவ மதகுருவாக வேண்டுமென டார்வின் விரும்பினார் என்பது வரலாற்றின் முரண்நகை. சர்ச்சுகள் தன் கருத்துகள்மீது தொடுத்த தாக்குதலால் அவர் தன்னை Devil’s Chaplain என்று நகைச்சுவையாக அழைத்துக்கொண்டார். ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்’’ 1859 நவம்பர் 24இல் வெளியானது. இப்புத்தகம் வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்த பி.வி.ஷி. ஙிமீணீரீறீமீ பயணம் 1831 டிசம்பரில் தொடங்கி 1836 அக்டோபரில் முடிவுற்றது. 2009 பிப்ரவரி 12ஆம் தேதி டார்வினின் 200ஆம் பிறந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நூல் வெளியான பிறகு, கடந்த 150 வருடங்களில் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மலைபோல் ஏராளமான ஆதாரங்கள் குவிந்துள்ளன. ஆனாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இன்றும் பரிணாமக் கோட்பாடு எதிர்கொள்ளும் தடைகள் பல. ஓரிரு சமயங்களில் சில அறிவியலாளர்களும் இத்தகையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் இதில் மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். பரிணாமக் கோட்பாடு என்பது ஒரு கோட்பாடுதானே (Theory) தவிர அறிவியல் உண்மை அல்ல என்பது முதல் குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன என்பது வரை ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக அறிவியலில் கோட்பாடு (Theory) என்கிற வார்த்தையை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பாகப் பரிணாமக் கோட்பாடு பற்றியும் நிலவும் தப்பெண்ணங்களுமே இதற்குக் காரணம்.
அறிவியலில் கோட்பாடு என்பது இயற்கை உலகின் சில பரிமாணங்களை அல்லது சில அம்சங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முறையாக விளக்குவது. தகுந்த ஆதாரங்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள், அறிவியல் விதிகள் (புவியீர்ப்பு மற்றும் வெப்பவியக்கவிசை விதிகள் போன்றவை), அனுமானங்கள், மற்றும் சோதிக்கப்பட்ட கருதுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் அவதானிப்பு பலமுறை மீண்டும் மீண்டும் சோதனைச்சாலையில் உறுதிசெய்யப்படுகிறபோதே அது உண்மை என்று அறிவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. கோட்பாடு, உண்மை என்பன வெவ்வேறான விஷயங்கள் என்பனவாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு கோட்பாடு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாவிட்டால் அது கோட்பாடாகவே அறிவியலாளர்களால் ஏற்கப்படாது. தலையைக் கிறுகிறுக்கவைக்கும் சார்பியல் மற்றும் குவான்டம் கோட்பாடுகள் உட்பட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். பெருவெடிப்பு நிகழ்வை யாரும் நேரடியாக அவதானித்ததில்லை. ஆனால் அக்கோட்பாட்டிற்குப் (ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்) பல மறைமுகமான ஆதாரங்கள் இருப்பதால்தான் அது கோட்பாடாக ஏற்கப்படுகிறது.
பரிணாம வளர்ச்சி என்பதற்குப் புதிய மாறுதலுடன் தோன்றும் சந்ததி என்றே அர்த்தம். ஆங்கிலத்தில் descent with modification என்பார்கள். ‘‘Survival of the fittest’’ (டார்வினின் புத்தகத்தைப் படித்த பிறகு ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற தத்துவவியலாளர் 1864இல் தான் எழுதிய Principles of Biology என்ற புத்தகத்தில் இந்தச் சொற்றொடரை உருவாக்கினார். இது Natural Selection என்பதற்குப் பதிலியாக உருவாக்கப்பட்டது. சக அறிவியலாளரும் தனது சொந்த வழியில் பரிணாமக் கோட்பாட்டை இதே காலகட்டத்தில் கண்டுபிடித்திருந்தவருமான ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸின் கருத்தை ஏற்று இந்தப் பதத்தை 1869இல் தனது புத்தகத்தின் ஐந்தாம் பதிப்பில் டார்வின் பயன்படுத்தினார். ஆனால் இது சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது) என்று சாதாரணப் பேச்சுவழக்கில் கூறப்படுவதன் அர்த்தம் எந்த ஓர் உயிரினம் தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறதோ அது நீடித்திருக்கிறது என்பதே. எந்த அம்சம் அது நீடித்திருக்க உதவுகிறதோ அது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரே உயிரினத்திற்குள்ளேயே வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக எல்லா வரிக்குதிரைகளுக்கும் ஒரே அளவான வரிகள் இருப்பதில்லை, எல்லாச் சிறுத்தைகளுக்கும் ஒரே அளவான அல்லது ஒரே எண்ணிக்கையிலான கருந்திட்டுகள் இருப்பதில்லை, எல்லாக் குதிரைகளும் ஒரே வேகத்தில் ஓடுவதில்லை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்னும் பேச்சுக்கே இடமிருக்காது, இயற்கைத் தேர்வும் (Natural Selection) நடைபெற இயலாது. ஓர் உயிரினம் தான் நீடித்து உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற அம்சங்களைப் பெற்றிருந்தால் அந்த இனம் நீடித்திருப்பதும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியமாகிறது. வேகமாக ஓடும் சிறுத்தையால் அதிக மான்களை வேட்டையாடி நீடித்து வாழ முடியும். அதேபோல் வேகமாக ஓடும் மானால் சிறுத்தையிடமிருந்து தப்பித்து நீடித்து வாழ முடியும். நீடித்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் தங்களது சாதக அம்சங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றன. இந்தச் சாதகமான குணங்களை அல்லது அம்சங்களைப் பெற்ற விலங்குகளின் எண்ணிக்கை அல்லது சதவிகிதம் படிப்படியாக அந்த உயிரினத்தின் கூட்டத்தில் அதிகரிக்கிறது. அதாவது சிறுத்தை இனத்தை எடுத்துக்கொண்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வேகமாக ஓடக்கூடிய சிறுத்தைகளால் நிரம்பியிருக்கும். மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பனிப் பிரதேசத்தில் இருக்கும் முயல்கள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து அவை தப்புவது கடினம். பனிப் பிரதேசத்தில் பழுப்பு நிறப் பொருட்களை அடையாளம் காண்பது எளிது என்பதால் ஊனுண்ணிகள் (Carnivorous) அவற்றை எளிதாக வேட்டையாடி விடும். உயிர்வாழ்வதே அவற்றுக்குப் பெரும் போராட்டமாகிவிடும். பழுப்பு என்றாலும் அனைத்து முயல்களும் ஒரே மாதிரியான பழுப்பாக இருக்கமாட்டா. சில லேசான பழுப்பிலும் சில அடர்த்தியான பழுப்பிலும் இருக்கும். ஒரு கட்டத்தில் திடீர் மரபியல் மாற்றத்தின் காரணமாக (Mutation) வெளிறிய நிறத்தில் (Albino) சில முயல்கள் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். எங்கும் வெண்மையாக இருக்கும் பனிப் பிரதேசத்தில் இவை தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த தலைமுறையிடையே வெளிறிய நிற முயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வெளிறிய நிற அம்சம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரபணுக்கள் வழியே கடத்தப்படும். சில பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள அனைத்து முயல்களுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். முயல்கள் எப்படிப் பனிப் பிரதேசத்திற்கு வந்தன? இரண்டு விதங்களில் இது நடக்கக்கூடும். ஒன்று, வெப்பப் பிரதேசத்திலிருந்து சில முயல்கள் பனிப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்ததால் தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். இரண்டு, வெப்பப் பிரதேசமாக இருந்த அப்பகுதி சுற்றுச்சூழல் மாற்றத்தால் பனிப் பிரதேசமாக மாறியிருக்கலாம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ஓர் உயிரினத்தின் சில குழுக்கள் இடம்பெயர்வது என்னும் இரண்டு காரணிகளுமே பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தப் புரிதலே தவறானது. பரிணாமக் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல மனிதன். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றுதான் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் தோன்றுவது என்பது (Speciation) பல ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்வது. ஒரு புதிய உயிரினம் தோன்றிய பின்னர் அதன் மூதாதையர் தொடர்ந்து நீடிக்கவோ அல்லது மறைந்துபோகவோகூடும். அது சுற்றுச்சூழலையும் அந்த உயிரினத்தின் சாதகபாதக அம்சங்களைப் பொறுத்தது.
பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களை உயிரியலாளர்கள் இருதளங்களில் வைக்கிறார்கள்: 1. நுண்ணியப் பரிணாம வளர்ச்சி (Microevolution). இத்துறை ஓர் உயிரினத்திற்குள் (within species) காலப்போக்கில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை ஆராய்கிறது. இத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கலாம். 2. பெரும் பரிணாம வளர்ச்சி (Macroevolution). இத்துறை பல்வேறு உயிரினக் குழுக்களிடையிலான (Taxonomic groups) பெரும் மாற்றங்கள் எவ்வாறு காலப்போக்கில் உருவாயின என்பதை ஆராய்கிறது. இந்த இரண்டில் முதல் மாற்றத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் சோதனைச்சாலை ஆய்வுகளிலேயே காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல சமயங்களில் படைப்புவாதிகளாலேயே மறுக்க முடிவதில்லை. உதாரணமாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஆர் கிராண்ட் அவர்கள் கால் போகாஸ் தீவுகளில் ஃபின்ச் என்ற பறவைகளை வைத்துச் செய்த ஆராய்ச்சி டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை உறுதிசெய்கிறது. இரண்டாம் மாற்றத்திற்கு ஆதாரங்கள் தொல்லுயிர் எச்சங்களிலிருந்து (Fossil) பெறப்படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களின் டி.என்.ஏக்கள் (DNA) ஒப்பிடப்படுவ தன் மூலம் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன என்பது நிறுவப்படுகிறது. உதாரணமாக, 2004இல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் பாதிமீனும் பாதி நீர்நில உயிரியும் என இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு தொல்லுயிர் எச்சம் (Tiktaalik roseae) கிடைத்தது. அது மனிதர்கள் மற்றும் எல்லா நாற்கால் விலங்குகள் எப்படி மீனிலிருந்து பரிணாம வளர்ச்சிபெற்றன என்று விளக்கும் தொல்லுயிர் எச்ச உயிரியலாளர்களின் (Paleontologists) கோட்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது. அதே போன்று, ஐம்பது லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனித மூதாதையர்களுக்கும் (இவர்களது உருவங்கள் மனிதர்களை ஒத்திருந்தபோதிலும் இவர்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள்) பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய மூதாதையர்களுக்கும் (உருவத்தில் இவர்கள் நவீன மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்) இடையே எப்படிப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு ஆதாரமாகப் பல தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் படைப்புவாதிகளை (Creationists), அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent Design) என்னும் ‘‘கோட்பாட்டை’’ ஆதரிப்பவர்களை எவ்வளவு ஆதாரங்களும் எத்தகைய ஆதாரங்களும் மாற்ற முடியாது. தாங்கள் நம்புவதை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாது கண்மூடித்தனமாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். படைப்புவாதிகளுக்கும் ‘அறிவார்ந்த வடிவமைப்பு’க் கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு. பைபிளில் கூறப்படுவதைப் போன்று மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்றிருப்பதைப் போலவே என்றென்றும் இருந்தார்கள் என்று வாதிடுபவர்கள் படைப்புவாதிகள். இவர்கள் அறிவியலுக்கு மாற்றாக இது கல்விச்சாலைகளில் போதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஏறக் குறைய கடந்த நூறு ஆண்டுகளாகப் போராடிவருபவர்கள். ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இவர்களது வாதங்கள் என்றுமே எடுபட்டதில்லை. ஆகவே தங்களது வாதங்களை மேலும் நுட்பமானதாக்கி வலிமையானதாக மாற்ற இவர்கள் செய்த முயற்சியே ‘‘அறிவார்ந்த வடிவமைப்பு’’ என்ற வாதம். (இதே போன்றதொரு வாதம் ஆர்க்டியா கான் வில்லியம் பாலே (Archdeacon William Paley) என்பவரால் 1700களின் இறுதியில் வைக்கப்பட்டது. இவரது இறையியல் கருத்துகள் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பாடத்திட்டத்தில் இருந்தமையால் அவற்றை டார்வின் நன்கு படித்திருந்தார்.) இவர்கள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்கிறார்கள். இப்பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் இவ்வளவு சிக்கலான உயிரியல் அமைப்பு முறை காலப் போக்கில் இயல்பாக உருவாகியிருக்க முடியாது, மாறாக அதன் பின்னணியில் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பு செயல்பட்டிருக்க வேண்டுமென்பதே இவர்களது வாதம். நேரடியாகச் சொன்னால் கடவுள், நுட்பமான மொழியில் சொன்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். இதற்கு என்ன ஆதாரம்? ஒரு சாதாரணக் கடிகாரத்தை உருவாக்கக்கூட ஒரு வடிவமைப்பாளர் தேவை. அப்படியிருக்கக் கண் போன்ற மிகச் சிக்கலான உறுப்பு எப்படித் தானாக உருவாகியிருக்க முடியும்? ஆகவே ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்.
இதை முட்டாள்தனமான வாதம் என்கிறார்கள் உயிரியலாளர்கள். திடீர் மரபியல் மாற்றத்தின் (Mutation) விளைவாக ஒளியை உணரக்கூடிய செல்கள் ஆதிகால உயிரினங்களில் உண்டாகியிருக்க வேண்டும். அதன் மூலம் இரவையும் பகலையும் பிரித்தறியும் ஆற்றலை ஆதிகால உயிரினங்கள் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு மரபியல் மாற்றத்தின் விளைவாக இந்த செல்கள் குழித்தன்மையைப் (concave) பெற்று ஒளி மற்றும் நிழல் வரும் திசையை உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இது அவசியம். ஆகவே அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த உறுப்பு செழுமையடைந்திருக்க வேண்டுமென்பதுதான் உயிரியலாளர்களின் பதில். பரிணாம வளர்ச்சியில் திடீரென ஏற்படும் மரபியல் மாற்றத்தின் பங்கு மிக முக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. தங்கள் மூதாதையர்களான படைப்புவாதிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே அறிவார்ந்த வடிவமைப்பு. இது நுட்பமான ஒன்றாகத் தோன்றினாலும் இதுவும் மதத்தில் ஆழமாக வேர்கொண்ட சிந்தனையே. இதன் காரணமாகவே இவர்களது வாதமும் அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை எடுபடவில்லை.
இத்தகையவர்கள் நம் இந்தியாவில் மிக அதிகம். ஆனால் ஒரு வித்தியாசம், அவர்கள் இந்து மதமும் அதன் புராண இதிகாசங்களும் கூறுவதை அப்படியே ஏற்கிறவர்கள். ஒரு நல்ல உதாரணம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. அவர் தொடர்ந்து எழுதிவரும் இந்து மஹா சமுத்திரம் அவர் ஒரு கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர் என்பதைக் காட்டுகிறது. இத்தகைய ஆதாரமற்ற நம்பிக்கைகள் தனிநபர் விவகாரமாக இருக்கிறவரை எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஒருவர் அவர் விரும்புவதைக் கேள்விக்குட்படுத்தாது நம்புவதோ ஏற்பதோ அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அதைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அத்தகைய கருத்துகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் என்ற பெயரில் அல்லது அறிவியல் கோட்பாடுகளுக்கு மாற்றாக (Alternative) விளங்கும் கோட்பாடுகள் என்ற வகையில் கற்பிக்கப்பட வேண்டுமெனக் கோருகிறபோதுதான் பிரச்சினையே எழுகிறது. இவை மதக் கோட்பாடுகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் அதை விரும்பும் மாணவர்களுக்குக் கற்பிப்பது என்பதை ஏற்க முடியும். ஆனால் அறிவியல் வகுப்புகளில் அறிவியலுக்கு இணையாக அல்லது மாற்றாக, போதிப்பது என்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. 2001இல் பாஜக அரசாங்கம் வேத ஜோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியது. ஜோதிடம் ஓர் அறிவியலோ அல்லது எதிர் காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றதோ அல்ல. இவ்வுண்மை ஏராளமான ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அதைச் சற்றேறக் குறைய அறிவியல் என்பதாகவும் அதன் மூலம் எதிர் காலத்தைப் பெருமளவு கணிக்க முடியும் என்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு அறிவியல் பார்வையோ அல்லது அறிவியலைப் பற்றிய அடிப்படை அறிவோகூட இல்லாதவர்கள் நீதிபதிகளாக இருப்பதையே காட்டுகிறது. அது மட்டுமல்ல, இதே போன்ற விவகாரமான படைப்பு வாதம் சம்பந்தமான வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பார்க்கிறபோது இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு முரணானது.
2005இல் Pew Research Centre என்கிற அமைப்பால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப் பின்படி மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்று இருந்ததைப் போலவே என்றென்றும் இருந்து வருகிறார்கள் என நம்புகிறவர்கள் 42%, பரிணாம வளர்ச்சியின்படி என்று கூறியவர்கள் 26%, அறிவார்ந்த வடிவமைப்பின்படி என்றவர்கள் 18%, தெரியாது என்றவர்கள் 14%. 2004ஆம் ஆண்டு Gallup நடத்திய கருத்துக்கணிப்பின்படி உலகம் இன்றிருப்பதைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறியவர்கள் 45%, கடவுளால் வழி நடத்தப்பட்ட பரிணாமக் கோட்பாட்டின்படி உலகம் உருவானது என்றவர்கள் 38%, பரிணாமக் கோட்பாட்டின்படி மட்டுமே இதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றவர்கள் வெறும் 13%. இதே கருத்துக்கணிப்பை Gallup 1982 இலிருந்து பலமுறை நடத்தியிருக்கிறது. இந்தச் சதவிகிதங்களில் அநேகமாக மாறுதலே இல்லை. அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படைப்புவாதம் (Creationism) பரிணாமக் கோட்பாட்டுடன் சேர்த்துப் போதிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்விக்கு 68% பேர் ‘ஆம்’ என்றும், பரிணாமக் கோட்பாட்டை நீக்கிவிட்டு வெறும் படைப்புவாதம் மட்டும் போதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு 40% பேர் ‘ஆம்’ என்றும் பதிலளித்திருந்தனர். இரண்டுமே போதிக்கப்பட வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதோ தன்னை ஒரு மாபெரும் சுதந்திரச் சிந்தனையாளராகப் பாவித்துக்கொண்டு ‘‘வேறுபட்ட கருத்துகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டுமா என்று கேட்கிறீர்கள். என்னுடைய பதில், ஆம்’’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். தீவிரவாதிகள் என்னும் சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ ஃபே சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தங்கள் தரப்பை வாதிடுவதற்கான வாய்ப்பைக்கூட மறுத்தவர் இவர். அறிவியல் துறையில் ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக வகுப்பறைகளிலும் அறிவியல் மாநாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக பரிணாமக் கோட்பாட்டிலேயே ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக விவாதிக்கவும்படுகின்றன. அறிவார்ந்த வடிவமைப்பு வாதம் அத்தகைய ஓர் அறிவியல் சர்ச்சையல்ல. எந்த ஆதாரமும் அற்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது மற்றும் விவாதிப்பது என்னும் பெயரில் அறிவியல் வகுப்புகளின் நேரம் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே அதிகபட்ச முன்னேற்றம் கண்டிருக்கும் நாடான அமெரிக்காவில் நிலைமை இப்படி. இதற்கான அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்கச் சமூகத்தை ஓர் அடிப்படைவாத சமூகம் என்றே நோம் சோம்ஸ்கி கருதுகிறார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம் ஈரானில் அடிப்படைவாதம் நிறுவனமயமாகி இருப்பதும் அமெரிக்காவில் அப்படி ஆகாதிருப்பதும்தான் என்கிறார் சோம்ஸ்கி. அரசியல் சாசனத்தின்படி அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய ஒரு சமூகத்தில் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு பெரும் இயக்கமே எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்தியாவில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினால் நிலைமை இன்னும் மோசமாக இருப்பது வெளிப்படக்கூடும்.
20ஆம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பரிணாமக் கோட்பாடு பள்ளிகளில் போதிக்கப்படுவதைத் தடைசெய்திருந்தன. பைபிளில் கூறப்படுவதை மறுக்கும் எதுவும் போதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் இத்தகைய சட்டத்தைப் பல மாநிலங்களின் காங்கிரசுகள் (சட்டப் பேரவைகள்) நிறைவேற்றியிருந்தன. டென்னிஸி மாநிலத்தின் பிரதி நிதிகள் அவையில் 1925 ஜனவரி 21இல் ஜான் பட்லர் என்பவரால் கொண்டுவரப்பட்ட மசோதா, பைபிளில் கூறப்பட்டபடி மனிதனை ஆண்டவன்தான் படைத்தார் என்பதை மறுத்துக் கீழ்நிலை விலங்குகளிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்கிற கோட்பாட்டைப் பள்ளிகளில் போதிப்பதைச் சட்டப்படி தடைசெய்தது. இம்மசோதா ஜனவரி 27இல் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது. பின்னர் மாநில செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 21 அன்று மாநில ஆளுநரின் கையொப்பத்துடன் சட்டமானது. பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்து அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இதுவே. இச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் திரண்டனர். இச்சட்டத்தை மீறும் ஆசிரியருக்கு ஆதரவாக வாதாடுவதாக அமெரிக்கக் குடியியல் உரிமைக் கழகம் (American Civil Liberties Union) அறிவித்தது. டென்னிஸி மாநிலத்தின் டேடன் நகரைச் சேர்ந்த ஜான் தாமஸ் ஸ்கோப்ஸ் என்ற ஆசிரியர் இதற்கு இசைந்தார். இவ்வழக்கின் மூலம் இச்சட்டத்தை அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றத்தை அறிவிக்கச் செய்வதே இதன் நோக்கம். இந்த வழக்கு ‘குரங்கு வழக்கு’ (Monkey Trial) என வரலாற்றில் புகழ்பெற்றது. ஆனால் ACLUவின் நோக்கம் அவ்வழக்கில் நிறைவேறவில்லை. ஸ்கோப்ஸுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடிவடைந்தது. ஸ்கோப்ஸுக்காக வாதாடிய அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ எதிர்பார்த்ததுபோல் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போகவேயில்லை. அதற்கு, அடுத்த 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1968இல் நடந்த Epperson vs Arkansas வழக்கில் பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்திருந்த ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சாசனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின்படி அரசுக்கும் மதத்திற்குமான உறவு முற்றிலும் பிரிக்கப்பட்டது. அதன்படி ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டம் படைப்புவாதத்தை அரசாங்கப் பள்ளிகளில் போதிக்கச் சொல்வதாலும் அது கிறித்துவ மதத்திற்குச் சாதகமாக இருப்பதாலும் அது அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு நடந்த இது போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை வழங்கியது. கடைசியாகத் தீர்ப்பு வந்தது 2005இல் நடந்த Kitzmiller, et al. vs Dover Area School District என்னும் வழக்கில்தான். இதிலும் அறிவார்ந்த வடிவமைப்பு என்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தங்களது வேதப் படைப்புவாதத்தைப் (Vedic creationism) பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அறிவார்ந்த வடிவமைப்பு வாதத்தைப் பள்ளிகளில் போதிப்பதற்கு வசதியாக ஒரு சட்டத்தை, மிகச் சமீபத்தில், லூசியானா மாநிலத்தின் ஆளுநர் பாபி ஜிண்டால் (இவருடைய பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜிண்டால் தனது பதின்வயதில் கத்தோலிக்கக் கிறித்துவராக மதம் மாறியவர்) கையொப்பத்துடன் 2008 ஜூன் 26இல் சட்டமானது. லூசியான மாநிலம் படைப்புவாதிகளின் கோட்டைகளுள் ஒன்று. இதே மாநிலம் 1980களில் கொண்டுவந்த Creationism Act என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது. இக்காலகட்டத்தில் லூசியானாவையும் சேர்த்து 27 மாநிலங்களில் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. படைப்புவாதிகளின் ஆதரவாளரான ஜிண்டால் இம்முறை கொண்டுவந்துள்ள சட்டமான Louisiana Science Education Act மிகப் புத்திசாலித்தனமாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம். சற்றேறக்குறைய நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (TNPFCR) Act, 2002 போன்றது (பின்னர் இச்சட்டம் ஜெயலலிதாவாலேயே திரும்பப் பெறப்பட்டது). சாதாரணமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னணியை வைத்துப் பார்த்தால்தான் அதன் எதிர்மறைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்காவில் படைப்புவாதிகளின் செல்வாக்கு அசாதாரணமானது. தீவிரக் கிறித்துவ நம்பிக்கையாளர்களின் (Evangelical Christians) வாக்குகளைப் பெறுவதற்காக ஜான் மெக்கைனும் பாரக் ஒபாமாவும் போட்டி போட்டதைக் கோடீஸ்வரரும் மத போதகருமான ரிக் வாரென் நடத்திய கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மத விவகாரங்கள் உட்படப் பல விஷயங்களில் மெக்கைனோடு ஒப்பிடுகிறபோது ஒபாமா முற்போக்கானவர். ஆனால் வாக்குகளுக்காகச் சமரசம் செய்துகொண்டவர். அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் ஜனாதி பதியாக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு நாத்திகர் ஜனாதிபதியாக ஆகவே முடியாது என்று கூறப்படுவதில் உண்மை இருக்கிறது.
டார்வினின் தாயகமான பிரிட்டனின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அமெரிக்காவைப் போன்று பிரிட்டன் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல. சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையில் எந்த உறவும் இருக்கக் கூடாது என்று கோரும் குரல்கள் பிரிட்டனில் எழ ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற செல்வாக்கு பிரிட்டனில் படைப்புவாதத்திற்கு இல்லை என்றாலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அறிவியலாளர்களுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளன. பிரிட்டனில் 2008 டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி (MORI poll) ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 37% பேரும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களில் 29% பேரும் பரிணாமக் கோட்பாட்டுடன் படைப்புவாதத்தையும் கற்பிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தேசிய அவமானம் என்றார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆனால் மிகவும் ஆறுதல் தருகிற விஷயமாக, கான்டர்பஃர்ரி ஆர்ச்பிஷப்பான ரோவன் வில்லியம்ஸ் படைப்புவாதம் பள்ளிகளில் போதிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார். பைபிளில் படைப்பைப் பற்றிக் கூறுவதை அறிவியல் கோட்பாடுகள் போன்றதொரு கோட்பாடாகக் கருதுவது, தொடர்பற்ற இரு கருத்தாக்கங்களைத் தொடர்புபடுத்துகிற தவறு (category mistake) என்றும் அவர் கூறியுள்ளார். அறிவியல் துறைப் பேராசிரியரான மைக்கல் ரீஸ், ‘‘அறிவியல் வகுப்பில் குழந்தைகள் படைப்புவாதம் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆசிரியர்கள் அது குறித்து விவாதிக்க வேண்டும். படைப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளையும் மதித்து நடத்த வேண்டும்’’ என்று ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஆனால் இது படைப்பு வாதத்தைப் போதிக்க வேண்டுமென அவர் கூறியதாகத் தவறாகச் செய்திகள் வெளியாகி அதன் காரணமாக ராயல் சொசைட்டியின் கல்வித் துறை இயக்குநராக வகித்துவந்த பதவியை அவர் இழக்க வேண்டியதாகிவிட்டது. அறிவியல் துறைப் பேராசிரியராக மட்டுமல்லாமல் அவர் ஒரு மதபோதகராகவும் இருந்தது அவரது பேச்சு திரிக்கப்பட்டு வெளியாவதற்குக் காரணமாகிவிட்டது.
டார்வினின் 200ஆம் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி சர்ச் ஆப் இங்கிலேண்ட் (Church of England) ‘‘நல்ல மதத்திற்கு நல்ல அறிவியல் தேவை’’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலிலியோவின் வானியல் விஷயத்தில் சர்ச் தவறிழைத்து பின்னர் தன் தவறை உணர்ந்தது . . . அதே போன்ற தவறு சார்லஸ் டார்வின் விஷயத்திலும் நடந்தது . . . சார்லஸ் டார்வின், உங்களை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்காக உங்களது 200ஆம் பிறந்தநாளின் போது உங்களிடம் சர்ச் ஆப் இங்கிலேண்ட் மன்னிப்பு கோருகிறது’’ என்று கூறியுள்ளது. இத்தகைய ஓர் அறிக்கையை வெளியிடுவதில் ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸின் பங்கு மிக முக்கியமானது.
மனித குலத்திற்கு மதம் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் மதத்திற்கும் அறிவியலுக்குமான உறவு பற்றியும் ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ‘‘நாகரிகத்தின் தொடக்க காலத்தில் நாட்காட்டியை (calendar) உருவாக்குவதிலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த மதகுருமார்கள் கிரகணங்களைத் (eclipses) தொடர்ந்து கவனித்துக் குறித்து வைத்திருந்ததால் கிரகணங்கள் உண்டாவதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்ற இந்த இரு விஷயங்களைத் தவிர வேறெந்த நல்ல பங்களிப்பையும் மதம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை’’ என்று கணித மேதையும் தத்துவ ஞானியுமான பெட்ரண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ஆனால் இக்கருத்திலிருந்து இன்றைய சமூக அறிவியலாளர்கள் (ஸ்காட் அட்ரன் போன்றவர்கள்) பெரிதும் மாறுபடுகிறார்கள். மனித நாகரிக வளர்ச்சியில் மதம் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை இவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இது சரியான பார்வையும்கூட. மதம் என்பது வெறும் கொடுமைகளை மட்டுமே இழைத்த ஓர் அமைப்பல்ல. சமூகத்தில் மதத்தின் இருப்பிடமும் முக்கியத்துவமும் விரைவில் மறைந்துவிடாது என்றாலும் மெல்லக் குறைந்து வருவது உறுதி. மதத்தைப் பற்றிய பரிவான பார்வையைக் கொண்ட நாத்திகர்கள் கூட மதமும் அறிவியலும் ஒன்றுக் கொன்று உதவியாகவோ அல்லது முரண்படாமலோ இருக்க முடியும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மிகப் பெரும் அறிவியலாளரும் நாத்திகரும் இடதுசாரி சிந்தனையாளருமான ஸ்டீபென் ஜே கோல்ட் Non Overlapping Majesteria என்னும் கருத்தை முன்வைத்தபோது, அதாவது அறிவியல் உண்மைகளைப் பற்றி ஆராய்கிறது, மதம் மதிப்பீடுகளைப் பற்றி ஆராய்கிறது என்கிற கருத்தை முன்வைத்தபோது அதை அவரது சக இடதுசாரி அறிவியலாளர்களே ஏற்க மறுத்தனர். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த பிடிப்புகொண்ட ஜே கோல்ட் இப்படிப்பட்ட தவறான கருத்தை முன்வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தில் தார்மீக மதிப்பீடுகளையும் சமூக விழுமியங்களையும் மதச்சார்பற்ற நிறுவனங்களால் உருவாக்க முடியும். அப்படி உருவாவதுதான் நல்லது என்பதே உலகெங்கும் உள்ள முற்போக்காளர்களின் கருத்து.
மனித வாழ்வின் கருத்து மற்றும் சித்தாந்த தளத்தில் மதம் ஆற்றும் பங்கு ஈடு இணையற்றது. அதனால் தான், ‘‘மதம்மீதான விமர்சனம்தான்மற்ற எல்லா விமர்சனத்திற்குமான முன்தேவை’’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘‘நான் அறிவொளியின் (Enlightenment) குழந்தை. பகுத்தறிவற்ற நம்பிக்கை மிக ஆபத்தானது. பகுத்தறிவற்ற நம்பிக்கையைத் தவிர்ப்பதில் நான் கவனமாக இருக்க முயல்கிறேன்’’ என்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்கா போன்ற அறிவியல்-தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் படைப்புவாதம், அறிவார்ந்த வடிவமைப்பு போன்ற அடிப்படைவாதப் போக்கு வலுவாக இருப்பது அடிப்படைவாதத்தால் ஏற்படும் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் சோம்ஸ்கி.
இத்தகைய அடிப்படைவாத இயக்கங்கள் வெற்றிபெறும் என்றால் என்ன நடக்கும்? ஒரு விளையாட்டான கற்பனைதான். சில, பல தலைமுறைகளுக்குப் பிறகு பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள், அறிவியலாளர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு, மனித குலம் இதுவரை அடைந்த எல்லா முன்னேற்றங்களும் மறைந்து, ஒரு கற்காலச் சமூகமே உருவாகியிருக்கும். ஆனால் இயற்கைத் தேர்வின்படி பகுத்தறிவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் என்பதுதான் அறிவியல் உண்மை. ஆதாரபூர்வமான நம்பிக்கைகள் ஆதாரமற்ற நம்பிக்கைகளை வெற்றிகொள்ளும்.

 க. திருநாவுக்கரசு
http://www.kalachuvadu.com
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
‘‘டார்வினின் புத்தகம் மிக முக்கியமானது. வரலாற்றில் நிகழும் வர்க்கப் போராட்டத்திற்கான இயற்கை அறிவியல்பூர்வமான அடிப்படையை அது எனக்கு வழங்குகிறது.’’
- கார்ல் மார்க்ஸ்
‘‘உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’
- எங்கெல்ஸ்
மனித குல வரலாற்றில் மனிதர்களின் சிந்தனைப்போக்கின் மீதும் அதன் விளைவாக வரலாற்றின் மீதும் மிகுந்த செல்வாக்கு செலுத்திய நூறு பேர் கொண்ட ஒரு பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் நிச்சயம் சார்லஸ் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கடந்த நானூறு வருட கால நவீன அறிவியல் வரலாற்றில் தோன்றிய அதிமுக்கியமான பத்து அறிவியலாளர்களைக் கொண்ட எத்தனை மாறுபட்ட பட்டியல்கள் தயாரிக்கப்பட்டாலும் அவை அனைத்திலும் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற ஒரு சில அறிவியலாளர்களின் செல்வாக்குடன் மட்டுமே ஒப்பிடத்தகுந்தது டார்வினின் செல்வாக்கு. நியூட்டனின் கண்டுபிடிப்புகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டு அறிவியல் உலகில் ஒரு மாபெரும் புரட்சியையே கொண்டுவந்தன. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் பிரபஞ்சத்தைப் பற்றி அதுகாறும் அறிவியலாளர்கள் கொண்டிருந்த பார்வையையே முற்றிலுமாய்ப் புரட்டிப்போட்டது. ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர், ஹைசன்பெர்க், ஷ்ராடிங்கர் போன்றோரால் உருவான குவான்டம் இயற்பியலின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகிலேயே பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின (குவான்டம் அறிவியலின் உண்மைகளை விளங்கிக்கொள்ளும் விதத்தில் ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போருக்கும் இடையில் மிக அடிப்படையான முரண்பாடு நிலவியது).
ஆனால் இவையெதுவுமே மத நம்பிக்கைகளை, கடவுளின் இருப்பை நேரடியாகக் கேள்விக்குட்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மத நம்பிக்கையாளர்கள் அப்படிக் கருதவில்லை. பூமியானது நாம் நினைப்பதுபோல் பிரபஞ்சத்தின் மையம் அல்ல மாறாக அது சூரியனைச் சுற்றிவரும் பல கோள்களுள் ஒன்று என்று அறிவியல்பூர்வமாக கலிலியோ 17ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் பைபிளில் கூறப்படுவது போல் முதல் நாளன்று வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இறுதியாக ஆறாம் நாளன்று தனது சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுத்து ஒரு செல் உயிரியிலிருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவனே மனிதன் (இந்தப் பரிணாம வளர்ச்சி நடந்தேறப் பல கோடி ஆண்டுகள் பிடித்தன) என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் டார்வின் 19ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் மதத்தின் - குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் - அடிப்படைகளை உலுக்கின. கோபர்நிகஸின் தத்துவார்த்தக் கோட்பாட்டை அறிவியல்ரீதியாக முன்வைத்து 1632ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘‘இரு தலையாய உலக அமைப்புமுறைகள் பற்றிய உரையாடல்’’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்னும் புத்தகத்திற்காக போப் மற்றும் கத்தோலிக்க மதத்தின் Inquistion அமைப்பால் கலிலியோ விசாரிக்கப்பட்டார். கலிலியோவே தனது கோட்பாட்டை மறுக்கும்படி செய்யப்பட்டார். அப்படிச் செய்யாத பட்சத்தில் கொளுத்தப்படுவார் என்றும் அச்சுறுத்தப்பட்டார். அதற்குப் பணிந்த கலிலியோவிற்கு வாழ்நாள் வீட்டுக்காவல் தண்டனை 1633இல் வழங்கப்பட்டது. தனது எஞ்சிய வருடங்களைக் கலிலியோ வீட்டுக்காவலில் கழித்தார். 359 வருடங்கள் கழித்து, 1992இல் போப் ஜான் பால் இதற்கு வருத்தம் தெரிவித்து கலிலியோவின் கருத்தே சரி என்றும் ஒப்புக்கொண்டார்.
1859, நவம்பர் 22இல் டார்வினின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்: அல்லது, வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிறப்பான இனங்கள் பாதுகாக்கப்படுவது’’ (The Origin of Species by Means of Natural Selection: Or, the Preservation of Favored Races in the Struggle for Life) என்னும் புத்தகம் வெளியானது. ஆனால் கலிலியோவிற்கு நேர்ந்த கதி டார்வினுக்கு நேரவில்லை. மதவாதிகள் திருந்தியிருந்ததல்ல இதற்குக் காரணம். மாறாக ஐரோப்பிய அறிவொளிக் காலகட்டத்தில் (18ஆம் நூற்றாண்டு) மத நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவிற்கும் இடையில் நடந்த கடும் போராட்டத்தில் மனிதப் பகுத்தறிவின் மேன்மை நிறுவப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டதுமே இதற்குக் காரணம். கோபர்நிகஸ் புரட்சியைப் போலவே டார்வினின் கண்டுபிடிப்பும் நாத்திகவாதத்திற்குப் பெரும் வலுசேர்த்தது. டார்வின் பிறப்பதற்கு முன்பு ஒருவர் நாத்திகவாதியாக இருப்பது என்பது மிகக் கடுமையான சவால். ஆனால் டார்வினின் கண்டு பிடிப்பு அதை இன்று எளிதான காரியமாக ஆக்கியிருக்கிறது என்று புகழ்பெற்ற அறிவியலாளரும் நாத்திகவாதியுமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதில் உண்மை இருக்கிறது என்றாலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாத்திகவாதமானது மிக வலுவான அறிவியக்கமாக வரலாற்றில் எப் போதுமே இருந்துவந்திருக்கிறது. இந்தியத் தத்துவ மரபில் சார்வாகத்தின் பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதைத் தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நிறுவியிருக்கிறார். இதில் ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவெனில் டார்வின் தன்னை நாத்திகவாதியாக ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. நாத்திகம் அறிவாளிகளுக்கு உகந்த விஷயம் என்று கருதிய டார்வின் சாதாரண மக்களுக்கு அது இன்னும் ஏற்புடையதாக இல்லை என்று கருதினார். ஆகவே தான் நாத்திகத்திற்கு ஆதரவாகப் பேசுவது தனது குடும்பத்தினரையும் வேறு பலரது மனங்களையும் புண்படுத்தும் என்று கருதிய டார்வின் தன்னை ஒரு ஐயவாதி (Agnostic) என்றே கூறிக்கொண்டார். மதம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதை எப்போதுமே தவிர்த்துவந்தார். கார்ல் மார்க்ஸின் மகளான எலியனோரின் காதலன் எட்வர்ட் எவ்லிங்கிற்கு டார்வின் எழுதிய கடிதத்தில் இது வெளிப்படுகிறது. மதம் பற்றிய அவரது கருத்துகளை இக்கடிதம் வெளிப்படுத்துவதுடன், பல காலமாக நம்பப்பட்டுவந்த கார்ல் மார்க்ஸ் - டார்வின் சம்பந்தமான ஒரு சர்ச்சைக்கும் வழிவகுத்தது. மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பியதாகவும் ஆனால் அதை டார்வின் மறுத்துவிட்டார் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் உண்மை என்னவெனில் எவ்லிங் தனது The Students’ Darwin என்னும் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பி அதற்கு அனுமதி கோரியிருந்தார். அப்புத்தகத்தில் தனது தீவிர நாத்திகவாதக் கருத்துகளை எவ்லிங் கூறியிருந்த காரணத்தால் அது தனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மென்மையான முறையில் டார்வின் மறுத்துவிட்டார். 1895இல் எலியனோர் தனது தந்தைக்கு வந்த கடிதங்களை ஆவணப்படுத்திய போது தனது காதலருக்கு டார்வின் எழுதிய கடிதத்தை அவற்றுடன் தவறுதலாகச் சேர்த்துவிட்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.
மதத்துடன் டார்வினுக்கு இருந்த உறவை அக்கடிதம் (13.10.1880இல் எழுதப்பட்டது) மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் அபூர்வமான ஆவணம் என்பதால் அதை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது:
அன்புள்ள ஐயா,
உங்கள் அன்பான கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்திற்கும் நான் மிக்கக் கடன்பட்டுள்ளேன். எனது எழுத்துக்கள் மீதான உங்களது கருத்துகளை எந்த வடிவத்திலும் வெளியிட எனது அனுமதி தேவையில்லை. அனுமதி தேவையற்ற ஒரு காரியத்திற்கு அனுமதி வழங்குவது நகைப்பிற்குரியது. எனக்குத் தெரியாத ஒரு விவகாரத்தைப் பற்றிய வெளியீட்டிற்கு எனது அங்கீகாரத்தை இது வழங்கும் என்பதால் அந்தப் புத்தகம் எனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மறுக்க விரும்புகிறேன் (என்னைக் கௌரவிக்க நினைத்ததற்கு நன்றி கூறுகிறேன்). மேலும், எல்லா விவகாரங்களைப் பற்றியுமான சுதந்திரச் சிந்தனையை நான் தீவிரமாக ஆதரிப்பவன் என்ற போதிலும் கிறித்துவத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிரான வாதங்கள் பொதுமக்கள்மீது பெரிதாகத் தாக்கம் எதையும் ஏற்படுத்தமாட்டா என்று எனக்குத் தோன்றுகிறது (இது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம்). அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்கள் படிப்படியாக அறிவுத் தெளிவைப் பெறுவதன் மூலமே சுதந்திரச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல இயலும். ஆகவே மதத்தைப் பற்றி எழுதுவதை நான் எப்போதுமே தவிர்த்து வந்திருக்கிறேன். எனது பணியை அறிவியலுடன் மட்டும் நிறுத்திக்கொண்டேன். மதத்தின் மீதான நேரடியான தாக்குதலுக்கு நான் உதவினால் அது என் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையைத் தரும் என்ற காரணத்தால் இத்தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். உங்கள் வேண்டுகோளை மறுப்பதற்காக வருந்துகிறேன். எனக்கு வயதாகிவிட்டது, உடலில் வலு இல்லை மற்றும் அச்சிடப்பட்ட தாள்களைப் பிழை பார்ப்பது என்னை மிகுந்த சோர்வுக்குள்ளாக்குகிறது.
உங்கள் உண்மையுள்ள
சார்லஸ் டார்வின்.
டார்வினின் கோட்பாடுகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ, மத நிறுவனங்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஆனால் தனது இளமைக் காலத்தில் தான் ஒரு கிறித்துவ மதகுருவாக வேண்டுமென டார்வின் விரும்பினார் என்பது வரலாற்றின் முரண்நகை. சர்ச்சுகள் தன் கருத்துகள்மீது தொடுத்த தாக்குதலால் அவர் தன்னை Devil’s Chaplain என்று நகைச்சுவையாக அழைத்துக்கொண்டார். ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்’’ 1859 நவம்பர் 24இல் வெளியானது. இப்புத்தகம் வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்த பி.வி.ஷி. ஙிமீணீரீறீமீ பயணம் 1831 டிசம்பரில் தொடங்கி 1836 அக்டோபரில் முடிவுற்றது. 2009 பிப்ரவரி 12ஆம் தேதி டார்வினின் 200ஆம் பிறந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நூல் வெளியான பிறகு, கடந்த 150 வருடங்களில் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மலைபோல் ஏராளமான ஆதாரங்கள் குவிந்துள்ளன. ஆனாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இன்றும் பரிணாமக் கோட்பாடு எதிர்கொள்ளும் தடைகள் பல. ஓரிரு சமயங்களில் சில அறிவியலாளர்களும் இத்தகையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் இதில் மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். பரிணாமக் கோட்பாடு என்பது ஒரு கோட்பாடுதானே (Theory) தவிர அறிவியல் உண்மை அல்ல என்பது முதல் குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன என்பது வரை ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக அறிவியலில் கோட்பாடு (Theory) என்கிற வார்த்தையை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பாகப் பரிணாமக் கோட்பாடு பற்றியும் நிலவும் தப்பெண்ணங்களுமே இதற்குக் காரணம்.
அறிவியலில் கோட்பாடு என்பது இயற்கை உலகின் சில பரிமாணங்களை அல்லது சில அம்சங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முறையாக விளக்குவது. தகுந்த ஆதாரங்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள், அறிவியல் விதிகள் (புவியீர்ப்பு மற்றும் வெப்பவியக்கவிசை விதிகள் போன்றவை), அனுமானங்கள், மற்றும் சோதிக்கப்பட்ட கருதுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் அவதானிப்பு பலமுறை மீண்டும் மீண்டும் சோதனைச்சாலையில் உறுதிசெய்யப்படுகிறபோதே அது உண்மை என்று அறிவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. கோட்பாடு, உண்மை என்பன வெவ்வேறான விஷயங்கள் என்பனவாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு கோட்பாடு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாவிட்டால் அது கோட்பாடாகவே அறிவியலாளர்களால் ஏற்கப்படாது. தலையைக் கிறுகிறுக்கவைக்கும் சார்பியல் மற்றும் குவான்டம் கோட்பாடுகள் உட்பட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். பெருவெடிப்பு நிகழ்வை யாரும் நேரடியாக அவதானித்ததில்லை. ஆனால் அக்கோட்பாட்டிற்குப் (ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்) பல மறைமுகமான ஆதாரங்கள் இருப்பதால்தான் அது கோட்பாடாக ஏற்கப்படுகிறது.
பரிணாம வளர்ச்சி என்பதற்குப் புதிய மாறுதலுடன் தோன்றும் சந்ததி என்றே அர்த்தம். ஆங்கிலத்தில் descent with modification என்பார்கள். ‘‘Survival of the fittest’’ (டார்வினின் புத்தகத்தைப் படித்த பிறகு ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற தத்துவவியலாளர் 1864இல் தான் எழுதிய Principles of Biology என்ற புத்தகத்தில் இந்தச் சொற்றொடரை உருவாக்கினார். இது Natural Selection என்பதற்குப் பதிலியாக உருவாக்கப்பட்டது. சக அறிவியலாளரும் தனது சொந்த வழியில் பரிணாமக் கோட்பாட்டை இதே காலகட்டத்தில் கண்டுபிடித்திருந்தவருமான ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸின் கருத்தை ஏற்று இந்தப் பதத்தை 1869இல் தனது புத்தகத்தின் ஐந்தாம் பதிப்பில் டார்வின் பயன்படுத்தினார். ஆனால் இது சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது) என்று சாதாரணப் பேச்சுவழக்கில் கூறப்படுவதன் அர்த்தம் எந்த ஓர் உயிரினம் தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறதோ அது நீடித்திருக்கிறது என்பதே. எந்த அம்சம் அது நீடித்திருக்க உதவுகிறதோ அது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரே உயிரினத்திற்குள்ளேயே வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக எல்லா வரிக்குதிரைகளுக்கும் ஒரே அளவான வரிகள் இருப்பதில்லை, எல்லாச் சிறுத்தைகளுக்கும் ஒரே அளவான அல்லது ஒரே எண்ணிக்கையிலான கருந்திட்டுகள் இருப்பதில்லை, எல்லாக் குதிரைகளும் ஒரே வேகத்தில் ஓடுவதில்லை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்னும் பேச்சுக்கே இடமிருக்காது, இயற்கைத் தேர்வும் (Natural Selection) நடைபெற இயலாது. ஓர் உயிரினம் தான் நீடித்து உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற அம்சங்களைப் பெற்றிருந்தால் அந்த இனம் நீடித்திருப்பதும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியமாகிறது. வேகமாக ஓடும் சிறுத்தையால் அதிக மான்களை வேட்டையாடி நீடித்து வாழ முடியும். அதேபோல் வேகமாக ஓடும் மானால் சிறுத்தையிடமிருந்து தப்பித்து நீடித்து வாழ முடியும். நீடித்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் தங்களது சாதக அம்சங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றன. இந்தச் சாதகமான குணங்களை அல்லது அம்சங்களைப் பெற்ற விலங்குகளின் எண்ணிக்கை அல்லது சதவிகிதம் படிப்படியாக அந்த உயிரினத்தின் கூட்டத்தில் அதிகரிக்கிறது. அதாவது சிறுத்தை இனத்தை எடுத்துக்கொண்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வேகமாக ஓடக்கூடிய சிறுத்தைகளால் நிரம்பியிருக்கும். மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பனிப் பிரதேசத்தில் இருக்கும் முயல்கள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து அவை தப்புவது கடினம். பனிப் பிரதேசத்தில் பழுப்பு நிறப் பொருட்களை அடையாளம் காண்பது எளிது என்பதால் ஊனுண்ணிகள் (Carnivorous) அவற்றை எளிதாக வேட்டையாடி விடும். உயிர்வாழ்வதே அவற்றுக்குப் பெரும் போராட்டமாகிவிடும். பழுப்பு என்றாலும் அனைத்து முயல்களும் ஒரே மாதிரியான பழுப்பாக இருக்கமாட்டா. சில லேசான பழுப்பிலும் சில அடர்த்தியான பழுப்பிலும் இருக்கும். ஒரு கட்டத்தில் திடீர் மரபியல் மாற்றத்தின் காரணமாக (Mutation) வெளிறிய நிறத்தில் (Albino) சில முயல்கள் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். எங்கும் வெண்மையாக இருக்கும் பனிப் பிரதேசத்தில் இவை தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த தலைமுறையிடையே வெளிறிய நிற முயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வெளிறிய நிற அம்சம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரபணுக்கள் வழியே கடத்தப்படும். சில பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள அனைத்து முயல்களுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். முயல்கள் எப்படிப் பனிப் பிரதேசத்திற்கு வந்தன? இரண்டு விதங்களில் இது நடக்கக்கூடும். ஒன்று, வெப்பப் பிரதேசத்திலிருந்து சில முயல்கள் பனிப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்ததால் தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். இரண்டு, வெப்பப் பிரதேசமாக இருந்த அப்பகுதி சுற்றுச்சூழல் மாற்றத்தால் பனிப் பிரதேசமாக மாறியிருக்கலாம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ஓர் உயிரினத்தின் சில குழுக்கள் இடம்பெயர்வது என்னும் இரண்டு காரணிகளுமே பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தப் புரிதலே தவறானது. பரிணாமக் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல மனிதன். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றுதான் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் தோன்றுவது என்பது (Speciation) பல ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்வது. ஒரு புதிய உயிரினம் தோன்றிய பின்னர் அதன் மூதாதையர் தொடர்ந்து நீடிக்கவோ அல்லது மறைந்துபோகவோகூடும். அது சுற்றுச்சூழலையும் அந்த உயிரினத்தின் சாதகபாதக அம்சங்களைப் பொறுத்தது.
பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களை உயிரியலாளர்கள் இருதளங்களில் வைக்கிறார்கள்: 1. நுண்ணியப் பரிணாம வளர்ச்சி (Microevolution). இத்துறை ஓர் உயிரினத்திற்குள் (within species) காலப்போக்கில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை ஆராய்கிறது. இத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கலாம். 2. பெரும் பரிணாம வளர்ச்சி (Macroevolution). இத்துறை பல்வேறு உயிரினக் குழுக்களிடையிலான (Taxonomic groups) பெரும் மாற்றங்கள் எவ்வாறு காலப்போக்கில் உருவாயின என்பதை ஆராய்கிறது. இந்த இரண்டில் முதல் மாற்றத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் சோதனைச்சாலை ஆய்வுகளிலேயே காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல சமயங்களில் படைப்புவாதிகளாலேயே மறுக்க முடிவதில்லை. உதாரணமாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஆர் கிராண்ட் அவர்கள் கால் போகாஸ் தீவுகளில் ஃபின்ச் என்ற பறவைகளை வைத்துச் செய்த ஆராய்ச்சி டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை உறுதிசெய்கிறது. இரண்டாம் மாற்றத்திற்கு ஆதாரங்கள் தொல்லுயிர் எச்சங்களிலிருந்து (Fossil) பெறப்படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களின் டி.என்.ஏக்கள் (DNA) ஒப்பிடப்படுவ தன் மூலம் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன என்பது நிறுவப்படுகிறது. உதாரணமாக, 2004இல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் பாதிமீனும் பாதி நீர்நில உயிரியும் என இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு தொல்லுயிர் எச்சம் (Tiktaalik roseae) கிடைத்தது. அது மனிதர்கள் மற்றும் எல்லா நாற்கால் விலங்குகள் எப்படி மீனிலிருந்து பரிணாம வளர்ச்சிபெற்றன என்று விளக்கும் தொல்லுயிர் எச்ச உயிரியலாளர்களின் (Paleontologists) கோட்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது. அதே போன்று, ஐம்பது லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனித மூதாதையர்களுக்கும் (இவர்களது உருவங்கள் மனிதர்களை ஒத்திருந்தபோதிலும் இவர்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள்) பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய மூதாதையர்களுக்கும் (உருவத்தில் இவர்கள் நவீன மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்) இடையே எப்படிப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு ஆதாரமாகப் பல தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் படைப்புவாதிகளை (Creationists), அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent Design) என்னும் ‘‘கோட்பாட்டை’’ ஆதரிப்பவர்களை எவ்வளவு ஆதாரங்களும் எத்தகைய ஆதாரங்களும் மாற்ற முடியாது. தாங்கள் நம்புவதை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாது கண்மூடித்தனமாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். படைப்புவாதிகளுக்கும் ‘அறிவார்ந்த வடிவமைப்பு’க் கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு. பைபிளில் கூறப்படுவதைப் போன்று மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்றிருப்பதைப் போலவே என்றென்றும் இருந்தார்கள் என்று வாதிடுபவர்கள் படைப்புவாதிகள். இவர்கள் அறிவியலுக்கு மாற்றாக இது கல்விச்சாலைகளில் போதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஏறக் குறைய கடந்த நூறு ஆண்டுகளாகப் போராடிவருபவர்கள். ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இவர்களது வாதங்கள் என்றுமே எடுபட்டதில்லை. ஆகவே தங்களது வாதங்களை மேலும் நுட்பமானதாக்கி வலிமையானதாக மாற்ற இவர்கள் செய்த முயற்சியே ‘‘அறிவார்ந்த வடிவமைப்பு’’ என்ற வாதம். (இதே போன்றதொரு வாதம் ஆர்க்டியா கான் வில்லியம் பாலே (Archdeacon William Paley) என்பவரால் 1700களின் இறுதியில் வைக்கப்பட்டது. இவரது இறையியல் கருத்துகள் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பாடத்திட்டத்தில் இருந்தமையால் அவற்றை டார்வின் நன்கு படித்திருந்தார்.) இவர்கள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்கிறார்கள். இப்பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் இவ்வளவு சிக்கலான உயிரியல் அமைப்பு முறை காலப் போக்கில் இயல்பாக உருவாகியிருக்க முடியாது, மாறாக அதன் பின்னணியில் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பு செயல்பட்டிருக்க வேண்டுமென்பதே இவர்களது வாதம். நேரடியாகச் சொன்னால் கடவுள், நுட்பமான மொழியில் சொன்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். இதற்கு என்ன ஆதாரம்? ஒரு சாதாரணக் கடிகாரத்தை உருவாக்கக்கூட ஒரு வடிவமைப்பாளர் தேவை. அப்படியிருக்கக் கண் போன்ற மிகச் சிக்கலான உறுப்பு எப்படித் தானாக உருவாகியிருக்க முடியும்? ஆகவே ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்.
இதை முட்டாள்தனமான வாதம் என்கிறார்கள் உயிரியலாளர்கள். திடீர் மரபியல் மாற்றத்தின் (Mutation) விளைவாக ஒளியை உணரக்கூடிய செல்கள் ஆதிகால உயிரினங்களில் உண்டாகியிருக்க வேண்டும். அதன் மூலம் இரவையும் பகலையும் பிரித்தறியும் ஆற்றலை ஆதிகால உயிரினங்கள் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு மரபியல் மாற்றத்தின் விளைவாக இந்த செல்கள் குழித்தன்மையைப் (concave) பெற்று ஒளி மற்றும் நிழல் வரும் திசையை உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இது அவசியம். ஆகவே அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த உறுப்பு செழுமையடைந்திருக்க வேண்டுமென்பதுதான் உயிரியலாளர்களின் பதில். பரிணாம வளர்ச்சியில் திடீரென ஏற்படும் மரபியல் மாற்றத்தின் பங்கு மிக முக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. தங்கள் மூதாதையர்களான படைப்புவாதிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே அறிவார்ந்த வடிவமைப்பு. இது நுட்பமான ஒன்றாகத் தோன்றினாலும் இதுவும் மதத்தில் ஆழமாக வேர்கொண்ட சிந்தனையே. இதன் காரணமாகவே இவர்களது வாதமும் அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை எடுபடவில்லை.
இத்தகையவர்கள் நம் இந்தியாவில் மிக அதிகம். ஆனால் ஒரு வித்தியாசம், அவர்கள் இந்து மதமும் அதன் புராண இதிகாசங்களும் கூறுவதை அப்படியே ஏற்கிறவர்கள். ஒரு நல்ல உதாரணம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. அவர் தொடர்ந்து எழுதிவரும் இந்து மஹா சமுத்திரம் அவர் ஒரு கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர் என்பதைக் காட்டுகிறது. இத்தகைய ஆதாரமற்ற நம்பிக்கைகள் தனிநபர் விவகாரமாக இருக்கிறவரை எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஒருவர் அவர் விரும்புவதைக் கேள்விக்குட்படுத்தாது நம்புவதோ ஏற்பதோ அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அதைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அத்தகைய கருத்துகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் என்ற பெயரில் அல்லது அறிவியல் கோட்பாடுகளுக்கு மாற்றாக (Alternative) விளங்கும் கோட்பாடுகள் என்ற வகையில் கற்பிக்கப்பட வேண்டுமெனக் கோருகிறபோதுதான் பிரச்சினையே எழுகிறது. இவை மதக் கோட்பாடுகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் அதை விரும்பும் மாணவர்களுக்குக் கற்பிப்பது என்பதை ஏற்க முடியும். ஆனால் அறிவியல் வகுப்புகளில் அறிவியலுக்கு இணையாக அல்லது மாற்றாக, போதிப்பது என்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. 2001இல் பாஜக அரசாங்கம் வேத ஜோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியது. ஜோதிடம் ஓர் அறிவியலோ அல்லது எதிர் காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றதோ அல்ல. இவ்வுண்மை ஏராளமான ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அதைச் சற்றேறக் குறைய அறிவியல் என்பதாகவும் அதன் மூலம் எதிர் காலத்தைப் பெருமளவு கணிக்க முடியும் என்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு அறிவியல் பார்வையோ அல்லது அறிவியலைப் பற்றிய அடிப்படை அறிவோகூட இல்லாதவர்கள் நீதிபதிகளாக இருப்பதையே காட்டுகிறது. அது மட்டுமல்ல, இதே போன்ற விவகாரமான படைப்பு வாதம் சம்பந்தமான வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பார்க்கிறபோது இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு முரணானது.
2005இல் Pew Research Centre என்கிற அமைப்பால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப் பின்படி மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்று இருந்ததைப் போலவே என்றென்றும் இருந்து வருகிறார்கள் என நம்புகிறவர்கள் 42%, பரிணாம வளர்ச்சியின்படி என்று கூறியவர்கள் 26%, அறிவார்ந்த வடிவமைப்பின்படி என்றவர்கள் 18%, தெரியாது என்றவர்கள் 14%. 2004ஆம் ஆண்டு Gallup நடத்திய கருத்துக்கணிப்பின்படி உலகம் இன்றிருப்பதைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறியவர்கள் 45%, கடவுளால் வழி நடத்தப்பட்ட பரிணாமக் கோட்பாட்டின்படி உலகம் உருவானது என்றவர்கள் 38%, பரிணாமக் கோட்பாட்டின்படி மட்டுமே இதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றவர்கள் வெறும் 13%. இதே கருத்துக்கணிப்பை Gallup 1982 இலிருந்து பலமுறை நடத்தியிருக்கிறது. இந்தச் சதவிகிதங்களில் அநேகமாக மாறுதலே இல்லை. அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படைப்புவாதம் (Creationism) பரிணாமக் கோட்பாட்டுடன் சேர்த்துப் போதிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்விக்கு 68% பேர் ‘ஆம்’ என்றும், பரிணாமக் கோட்பாட்டை நீக்கிவிட்டு வெறும் படைப்புவாதம் மட்டும் போதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு 40% பேர் ‘ஆம்’ என்றும் பதிலளித்திருந்தனர். இரண்டுமே போதிக்கப்பட வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதோ தன்னை ஒரு மாபெரும் சுதந்திரச் சிந்தனையாளராகப் பாவித்துக்கொண்டு ‘‘வேறுபட்ட கருத்துகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டுமா என்று கேட்கிறீர்கள். என்னுடைய பதில், ஆம்’’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். தீவிரவாதிகள் என்னும் சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ ஃபே சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தங்கள் தரப்பை வாதிடுவதற்கான வாய்ப்பைக்கூட மறுத்தவர் இவர். அறிவியல் துறையில் ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக வகுப்பறைகளிலும் அறிவியல் மாநாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக பரிணாமக் கோட்பாட்டிலேயே ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக விவாதிக்கவும்படுகின்றன. அறிவார்ந்த வடிவமைப்பு வாதம் அத்தகைய ஓர் அறிவியல் சர்ச்சையல்ல. எந்த ஆதாரமும் அற்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது மற்றும் விவாதிப்பது என்னும் பெயரில் அறிவியல் வகுப்புகளின் நேரம் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே அதிகபட்ச முன்னேற்றம் கண்டிருக்கும் நாடான அமெரிக்காவில் நிலைமை இப்படி. இதற்கான அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்கச் சமூகத்தை ஓர் அடிப்படைவாத சமூகம் என்றே நோம் சோம்ஸ்கி கருதுகிறார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம் ஈரானில் அடிப்படைவாதம் நிறுவனமயமாகி இருப்பதும் அமெரிக்காவில் அப்படி ஆகாதிருப்பதும்தான் என்கிறார் சோம்ஸ்கி. அரசியல் சாசனத்தின்படி அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய ஒரு சமூகத்தில் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு பெரும் இயக்கமே எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்தியாவில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினால் நிலைமை இன்னும் மோசமாக இருப்பது வெளிப்படக்கூடும்.
20ஆம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பரிணாமக் கோட்பாடு பள்ளிகளில் போதிக்கப்படுவதைத் தடைசெய்திருந்தன. பைபிளில் கூறப்படுவதை மறுக்கும் எதுவும் போதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் இத்தகைய சட்டத்தைப் பல மாநிலங்களின் காங்கிரசுகள் (சட்டப் பேரவைகள்) நிறைவேற்றியிருந்தன. டென்னிஸி மாநிலத்தின் பிரதி நிதிகள் அவையில் 1925 ஜனவரி 21இல் ஜான் பட்லர் என்பவரால் கொண்டுவரப்பட்ட மசோதா, பைபிளில் கூறப்பட்டபடி மனிதனை ஆண்டவன்தான் படைத்தார் என்பதை மறுத்துக் கீழ்நிலை விலங்குகளிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்கிற கோட்பாட்டைப் பள்ளிகளில் போதிப்பதைச் சட்டப்படி தடைசெய்தது. இம்மசோதா ஜனவரி 27இல் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது. பின்னர் மாநில செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 21 அன்று மாநில ஆளுநரின் கையொப்பத்துடன் சட்டமானது. பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்து அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இதுவே. இச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் திரண்டனர். இச்சட்டத்தை மீறும் ஆசிரியருக்கு ஆதரவாக வாதாடுவதாக அமெரிக்கக் குடியியல் உரிமைக் கழகம் (American Civil Liberties Union) அறிவித்தது. டென்னிஸி மாநிலத்தின் டேடன் நகரைச் சேர்ந்த ஜான் தாமஸ் ஸ்கோப்ஸ் என்ற ஆசிரியர் இதற்கு இசைந்தார். இவ்வழக்கின் மூலம் இச்சட்டத்தை அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றத்தை அறிவிக்கச் செய்வதே இதன் நோக்கம். இந்த வழக்கு ‘குரங்கு வழக்கு’ (Monkey Trial) என வரலாற்றில் புகழ்பெற்றது. ஆனால் ACLUவின் நோக்கம் அவ்வழக்கில் நிறைவேறவில்லை. ஸ்கோப்ஸுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடிவடைந்தது. ஸ்கோப்ஸுக்காக வாதாடிய அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ எதிர்பார்த்ததுபோல் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போகவேயில்லை. அதற்கு, அடுத்த 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1968இல் நடந்த Epperson vs Arkansas வழக்கில் பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்திருந்த ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சாசனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின்படி அரசுக்கும் மதத்திற்குமான உறவு முற்றிலும் பிரிக்கப்பட்டது. அதன்படி ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டம் படைப்புவாதத்தை அரசாங்கப் பள்ளிகளில் போதிக்கச் சொல்வதாலும் அது கிறித்துவ மதத்திற்குச் சாதகமாக இருப்பதாலும் அது அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு நடந்த இது போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை வழங்கியது. கடைசியாகத் தீர்ப்பு வந்தது 2005இல் நடந்த Kitzmiller, et al. vs Dover Area School District என்னும் வழக்கில்தான். இதிலும் அறிவார்ந்த வடிவமைப்பு என்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தங்களது வேதப் படைப்புவாதத்தைப் (Vedic creationism) பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அறிவார்ந்த வடிவமைப்பு வாதத்தைப் பள்ளிகளில் போதிப்பதற்கு வசதியாக ஒரு சட்டத்தை, மிகச் சமீபத்தில், லூசியானா மாநிலத்தின் ஆளுநர் பாபி ஜிண்டால் (இவருடைய பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜிண்டால் தனது பதின்வயதில் கத்தோலிக்கக் கிறித்துவராக மதம் மாறியவர்) கையொப்பத்துடன் 2008 ஜூன் 26இல் சட்டமானது. லூசியான மாநிலம் படைப்புவாதிகளின் கோட்டைகளுள் ஒன்று. இதே மாநிலம் 1980களில் கொண்டுவந்த Creationism Act என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது. இக்காலகட்டத்தில் லூசியானாவையும் சேர்த்து 27 மாநிலங்களில் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. படைப்புவாதிகளின் ஆதரவாளரான ஜிண்டால் இம்முறை கொண்டுவந்துள்ள சட்டமான Louisiana Science Education Act மிகப் புத்திசாலித்தனமாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம். சற்றேறக்குறைய நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (TNPFCR) Act, 2002 போன்றது (பின்னர் இச்சட்டம் ஜெயலலிதாவாலேயே திரும்பப் பெறப்பட்டது). சாதாரணமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னணியை வைத்துப் பார்த்தால்தான் அதன் எதிர்மறைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்காவில் படைப்புவாதிகளின் செல்வாக்கு அசாதாரணமானது. தீவிரக் கிறித்துவ நம்பிக்கையாளர்களின் (Evangelical Christians) வாக்குகளைப் பெறுவதற்காக ஜான் மெக்கைனும் பாரக் ஒபாமாவும் போட்டி போட்டதைக் கோடீஸ்வரரும் மத போதகருமான ரிக் வாரென் நடத்திய கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மத விவகாரங்கள் உட்படப் பல விஷயங்களில் மெக்கைனோடு ஒப்பிடுகிறபோது ஒபாமா முற்போக்கானவர். ஆனால் வாக்குகளுக்காகச் சமரசம் செய்துகொண்டவர். அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் ஜனாதி பதியாக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு நாத்திகர் ஜனாதிபதியாக ஆகவே முடியாது என்று கூறப்படுவதில் உண்மை இருக்கிறது.
டார்வினின் தாயகமான பிரிட்டனின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அமெரிக்காவைப் போன்று பிரிட்டன் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல. சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையில் எந்த உறவும் இருக்கக் கூடாது என்று கோரும் குரல்கள் பிரிட்டனில் எழ ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற செல்வாக்கு பிரிட்டனில் படைப்புவாதத்திற்கு இல்லை என்றாலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அறிவியலாளர்களுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளன. பிரிட்டனில் 2008 டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி (MORI poll) ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 37% பேரும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களில் 29% பேரும் பரிணாமக் கோட்பாட்டுடன் படைப்புவாதத்தையும் கற்பிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தேசிய அவமானம் என்றார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆனால் மிகவும் ஆறுதல் தருகிற விஷயமாக, கான்டர்பஃர்ரி ஆர்ச்பிஷப்பான ரோவன் வில்லியம்ஸ் படைப்புவாதம் பள்ளிகளில் போதிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார். பைபிளில் படைப்பைப் பற்றிக் கூறுவதை அறிவியல் கோட்பாடுகள் போன்றதொரு கோட்பாடாகக் கருதுவது, தொடர்பற்ற இரு கருத்தாக்கங்களைத் தொடர்புபடுத்துகிற தவறு (category mistake) என்றும் அவர் கூறியுள்ளார். அறிவியல் துறைப் பேராசிரியரான மைக்கல் ரீஸ், ‘‘அறிவியல் வகுப்பில் குழந்தைகள் படைப்புவாதம் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆசிரியர்கள் அது குறித்து விவாதிக்க வேண்டும். படைப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளையும் மதித்து நடத்த வேண்டும்’’ என்று ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஆனால் இது படைப்பு வாதத்தைப் போதிக்க வேண்டுமென அவர் கூறியதாகத் தவறாகச் செய்திகள் வெளியாகி அதன் காரணமாக ராயல் சொசைட்டியின் கல்வித் துறை இயக்குநராக வகித்துவந்த பதவியை அவர் இழக்க வேண்டியதாகிவிட்டது. அறிவியல் துறைப் பேராசிரியராக மட்டுமல்லாமல் அவர் ஒரு மதபோதகராகவும் இருந்தது அவரது பேச்சு திரிக்கப்பட்டு வெளியாவதற்குக் காரணமாகிவிட்டது.
டார்வினின் 200ஆம் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி சர்ச் ஆப் இங்கிலேண்ட் (Church of England) ‘‘நல்ல மதத்திற்கு நல்ல அறிவியல் தேவை’’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலிலியோவின் வானியல் விஷயத்தில் சர்ச் தவறிழைத்து பின்னர் தன் தவறை உணர்ந்தது . . . அதே போன்ற தவறு சார்லஸ் டார்வின் விஷயத்திலும் நடந்தது . . . சார்லஸ் டார்வின், உங்களை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்காக உங்களது 200ஆம் பிறந்தநாளின் போது உங்களிடம் சர்ச் ஆப் இங்கிலேண்ட் மன்னிப்பு கோருகிறது’’ என்று கூறியுள்ளது. இத்தகைய ஓர் அறிக்கையை வெளியிடுவதில் ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸின் பங்கு மிக முக்கியமானது.
மனித குலத்திற்கு மதம் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் மதத்திற்கும் அறிவியலுக்குமான உறவு பற்றியும் ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ‘‘நாகரிகத்தின் தொடக்க காலத்தில் நாட்காட்டியை (calendar) உருவாக்குவதிலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த மதகுருமார்கள் கிரகணங்களைத் (eclipses) தொடர்ந்து கவனித்துக் குறித்து வைத்திருந்ததால் கிரகணங்கள் உண்டாவதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்ற இந்த இரு விஷயங்களைத் தவிர வேறெந்த நல்ல பங்களிப்பையும் மதம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை’’ என்று கணித மேதையும் தத்துவ ஞானியுமான பெட்ரண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ஆனால் இக்கருத்திலிருந்து இன்றைய சமூக அறிவியலாளர்கள் (ஸ்காட் அட்ரன் போன்றவர்கள்) பெரிதும் மாறுபடுகிறார்கள். மனித நாகரிக வளர்ச்சியில் மதம் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை இவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இது சரியான பார்வையும்கூட. மதம் என்பது வெறும் கொடுமைகளை மட்டுமே இழைத்த ஓர் அமைப்பல்ல. சமூகத்தில் மதத்தின் இருப்பிடமும் முக்கியத்துவமும் விரைவில் மறைந்துவிடாது என்றாலும் மெல்லக் குறைந்து வருவது உறுதி. மதத்தைப் பற்றிய பரிவான பார்வையைக் கொண்ட நாத்திகர்கள் கூட மதமும் அறிவியலும் ஒன்றுக் கொன்று உதவியாகவோ அல்லது முரண்படாமலோ இருக்க முடியும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மிகப் பெரும் அறிவியலாளரும் நாத்திகரும் இடதுசாரி சிந்தனையாளருமான ஸ்டீபென் ஜே கோல்ட் Non Overlapping Majesteria என்னும் கருத்தை முன்வைத்தபோது, அதாவது அறிவியல் உண்மைகளைப் பற்றி ஆராய்கிறது, மதம் மதிப்பீடுகளைப் பற்றி ஆராய்கிறது என்கிற கருத்தை முன்வைத்தபோது அதை அவரது சக இடதுசாரி அறிவியலாளர்களே ஏற்க மறுத்தனர். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த பிடிப்புகொண்ட ஜே கோல்ட் இப்படிப்பட்ட தவறான கருத்தை முன்வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தில் தார்மீக மதிப்பீடுகளையும் சமூக விழுமியங்களையும் மதச்சார்பற்ற நிறுவனங்களால் உருவாக்க முடியும். அப்படி உருவாவதுதான் நல்லது என்பதே உலகெங்கும் உள்ள முற்போக்காளர்களின் கருத்து.
மனித வாழ்வின் கருத்து மற்றும் சித்தாந்த தளத்தில் மதம் ஆற்றும் பங்கு ஈடு இணையற்றது. அதனால் தான், ‘‘மதம்மீதான விமர்சனம்தான்மற்ற எல்லா விமர்சனத்திற்குமான முன்தேவை’’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘‘நான் அறிவொளியின் (Enlightenment) குழந்தை. பகுத்தறிவற்ற நம்பிக்கை மிக ஆபத்தானது. பகுத்தறிவற்ற நம்பிக்கையைத் தவிர்ப்பதில் நான் கவனமாக இருக்க முயல்கிறேன்’’ என்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்கா போன்ற அறிவியல்-தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் படைப்புவாதம், அறிவார்ந்த வடிவமைப்பு போன்ற அடிப்படைவாதப் போக்கு வலுவாக இருப்பது அடிப்படைவாதத்தால் ஏற்படும் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் சோம்ஸ்கி.
இத்தகைய அடிப்படைவாத இயக்கங்கள் வெற்றிபெறும் என்றால் என்ன நடக்கும்? ஒரு விளையாட்டான கற்பனைதான். சில, பல தலைமுறைகளுக்குப் பிறகு பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள், அறிவியலாளர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு, மனித குலம் இதுவரை அடைந்த எல்லா முன்னேற்றங்களும் மறைந்து, ஒரு கற்காலச் சமூகமே உருவாகியிருக்கும். ஆனால் இயற்கைத் தேர்வின்படி பகுத்தறிவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் என்பதுதான் அறிவியல் உண்மை. ஆதாரபூர்வமான நம்பிக்கைகள் ஆதாரமற்ற நம்பிக்கைகளை வெற்றிகொள்ளும்.