Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 24, 2009

புதிய சமூகத்தை உருவாக்குவதே மனிதகுலத்தின் லட்சியம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


மனிதனின் அறிவு சிறுகச் சிறுக பெருகிக் கொண்டே இருக்கிறது. அறிவின்மையே மனிதனின் இழிநிலைக்கு முதற்காரணம். அறிவு பெருகப் பெருக அவன் நிலை இடைவிடாமல் முன்னேற்றம் காண்கிறது. அவனுடைய ஆயுள் பெருகுகிறது. மிகைப்படுத்தப்பட்ட செல்வமோ, மிகையான வறுமையோ இல்லை. சாவு என்பது விபத்துக்களால் ஏற்படும். அல்லது முதுமைத் தளர்ச்சியால் உண்டாகும்.




Imageஅறிவு அதிகரிக்க அதிகரிக்க தன்னைச் சங்கடங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுகிறான். மற்றவர்களால் தனக்கு எவ்வித இடையூறும் நிகழ்ந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வுடன் வாழ்கிறான். உலகத்தில் நடக்கிற நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன? எப்படி நடக்கின்றன? என்பதைப் புரிந்து கொள்வதற்கு வேண்டிய தகவல்கள் மனிதனின் கரங்களை வலுப்படுத்துகின்றன. தன்னுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறமை உண்டாகிறது. ஆட்சியாளர்களின் ஆணவம், பேராசை, அறிவிலித்தனம் ஆகியவற்றை எப்படித் தணிக்கலாமென்று அறிந்து செயல்பட முடிகிறது மனிதனுக்கு. படிப்படியாக அவன் குற்றங்குறைகள் நீங்கப் பெற்று பூர்ண மனிதனாக விளங்க முடியும்!"

"மனித உள்ளத்தின் முன்னேற்றத்தின் பொது வடிவம்" என்னும் நூலில் மனிதனைப் பற்றி மேல் இருக்கும் வாசங்களை குறிப்பிடுகிறார் கண்டோர்செட் (Condorcet) என்னும் தத்துவஞானி.

கண்டோர்செட் தத்துவங்கள், ‘மறப்போம்... மன்னிப்போம்’ என்னும் கோட்பாடுகளையே நம்முன் வைக்கிறார். ஒட்டு மொத்த சமுதாயத்தைத் திருத்தி அமைத்து, அமைதியும், மகிழ்ச்சியும் கொண்ட சமூகத்தை உருவாக்க முற்படுவதே மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும் என்பதில் கண்டோர்செட் உறுதியாக இருக்கிறார். ஒரு சில தனி மனிதர்களின் நடத்தைகளையும், அசிங்கங்களையும் கண்டு மனித குலத்தின் மீதுள்ள நம்பிக்கையை நாம் இழந்துவிடக் கூடாது என்னும் கண்டோர்செட், "மனித சமூதாயத்தில், சகோதரத்துவக் கோட்பாட்டை நாம் ஒதுக்கிவிடக் கூடாது என்று தீவிரமாக வலியுத்துகிறார். ஆனால், கண்டோர்செட் கோட்பாட்டை கிறிஸ்தவ மதம் ஆட்சேபித்தது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

ஆம்! "ஆதிப்பாவம் புரிந்தவன் மனிதன்" என்னும் கிறிஸ்துவ சமயக்கோட்பாட்டுக்கு எதிராகவே கண்டோர்செட் கோட்பாடு இருப்பதாக சொல்கிறது. "மனிதன் அடிப்படையில் நல்லவனே, அவனுடைய சிறு அளவு மெல்ல மெல்ல அறிவு வளர்ச்சியின் பெருக்கமே அவனை ஆராய வைக்கிறது" என்கிறார் கண்டோர்செட்.

"இல்லை, இல்லை... அவன் அயோக்கியன்! மகா அயோக்கியன்! நீ கம்முன்னு கட!..." புதிய ஆவியின் பெயரால் கண்டோர்செட்டுக்கு ´குட்டு´ வைக்கிறது கிறிஸ்துவக் கோட்பாடு.

"மகாபாவி மனிதன்" என்பதில் எதை சாதிக்க முற்படுகிறது கிறிஸ்தவ சமயம்? நான் ஏனடா பாவியாக இருக்க வேண்டும்? என்னை பாவியாக்க உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது? அதே ஆதாம், ஏவால், ஆப்பிளில் என் கதையும் ஓடவேண்டுமா? அன்றைய நிர்வாண மனிதனின் ‘குதப்படி’யை இன்றைய ஜீன்ஸ் மனிதனுக்கும் ஜீஸஸ் திணிக்க வேண்டுமா?" கேட்கிறானே இன்றைய மனிதன்.

"என்ன சொல்லப் போகிறது கிறிஸ்தவ சமயம்...?"

எப்படி கேள்வி பிறந்தது அவனுக்குள்? எந்த அறிவு இப்படி பேச வைக்கிறது. நாளைய அறிவு எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிடும். ஆனால் நேற்றைய மனிதன் ஆரம்பித்து வைத்துவிட்டானே நம் அறிவின் ஆராய்ச்சியை...

ஆதி மனிதர்களை பல ஆயிரம் ஆண்டுகளாக பாவத்தின் பெயரால் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் துணிந்து கண்டோர்செட் கோட்பாடுகளை ஏற்கின்றனரே! அறிவியலும், "தன்னை திருத்திக் கொள்வதே உயிரின் இயல்பு" என்னும் கோட்பாட்டில் மதத்திற்கு எதிராகத்தானே இருக்கிறது. இந்த அறிவுச் சிந்தனை தான் மனிதச் சுதந்திரம் என்பது.

"யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமல், எதையும் மதிக்கத் தெரியாமல், தான்தோன்றித்தனமாக திரிந்துக் கொண்டிருப்பதா மனிதச் சுதந்திரம்?" மனிதனை பாவி என்னும் கோட்பாடு மனிதச் சுதந்திரத்திற்கு அர்த்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. மதக்கோட்பாட்டுக்கு எதிரான மனிதச் சுதந்திரத்திற்கு அறிஞர்களும், தத்துவ ஞானிகளும் தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கின்றனர். மனிதனின் ஆழ்மனம் பற்றி அறிவியல் எடுத்துரைத்திருக்கிறது. இப்படி ஆதாரமான கோட்பாடுகள் எதற்கும் எதிர்கேள்வி வைக்க முடியவில்லை சமயத்தால்.

பூமியில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி அமீபாவில் தொடங்கி பலகோடி ஆண்டுகளாக மாற்றம் அடைந்து மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது மனிதனின் சிந்தனை. நாளைய மனிதனுக்கு நம்மை மனிதத் தகுதியில் வகைப்படுத்தும் அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்குமா என்பதும் உறுதியில்லை. இப்படி மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டே இருக்கும் மனித அறிவு நேற்றைய சங்கதிகளை பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதில் பகுத்தறிவு சிந்தனை உறுதியாய் நிற்கிறது. இங்கே தான் மனிதகுலத்தில் சமயத்திற்கும், சமூகவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகிறது.

மதக்கோட்பாட்டின் அடிப்படையையே தூக்கியெறியும்போது மக்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது? அவர்களுக்குள் குற்றவுணர்ச்சியை வைத்து ஆண்டவனின் பேரால் போதித்துக் கொண்டும், மன்னிப்பு கொடுத்துக் கொண்டும் இருந்தவர்கள் எல்லாம் மூட்டையைக் கட்டிக் கொண்டு வேறு வேலைக்குப் போக வேண்டியதுதான். அதனால் மீண்டும் மீண்டும் மதம் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்களின் அறிவும் கண்டோர்செட் சொன்னது போல் இன்று வேறு பரிணாமத்தில் இருக்கிறது. ஆனால், மனித சுதந்திரம் என்பதில் இருக்கும் சிந்தனைப்போக்கும், காரிய காரண தொடர்புகளும், ஒவ்வொரு மனிதனின் தனிக்குணமும் மனிதர்கள் இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என்று கணிக்க முடியாது என்கிறார் மற்றொரு தத்துவஞானி நீப்யூர்! கணிப்புக்கு அப்பாற்பட்டவன் மனிதன் என்றால் அலங்கோலப்பட்டுவிடும் என்னும் நீப்யூர் அறநெறிகோட்பாட்டுக்குள் மனிதனின் பொது விதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்னும் கண்டோர்செட் சிந்தனைக்கு பொறுந்திப் போகிறார்.

இன்னும் காலம் கிடக்கிறது. தற்போதைய சமூதாய அமைப்பு கூட இன்னும் அறிவு வளர்ச்சி நிலையை அடைந்து மனிதத் தன்மைக்குள் வரவில்லை. காத்திருக்க வேண்டியது தான் நாம். நாளைய சந்ததி ‘லிபரலிச’த்தின் கோட்பாடுகளை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை நாளைய அறிவு தீர்மானிக்கும். ஆனால், "கடவுளின் பேரால் நாம் இரசிக்கப்படுவோம்" என்ற வார்த்தைகள் காமெடிக்கு கூட உபயோகப்படாமல் மறைந்து போய்விடக்கூடும்.

- தமிழச்சி

http://www.mykathiravan.com/

கருத்துகள் இல்லை: