Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், ஜூலை 05, 2010

வீரமாமுனிவர்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
(இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.
இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.
  • கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
  • திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
  • திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
  • காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே

இந்தப் பாடல் எருசலேம் நகரை வர்ணிக்கிறது.

காப்பியத் தலைவர் வளவனாரை வர்ணிக்கிறது கீழ்வரும் பாடல்:
அன்பு வைத்த உயிர்நிலை அஃதிலார்க்
கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை
இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன்
துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான்


வளனாருக்கும் மரியாவுக்கும் திருமணம் நிகழ்வது குறித்த ஒரு பாடலில் வரும் ஒலி பற்றிய வருணனை கேட்கக் கேட்க இனிமை பயக்கும். இதோ அந்த ஒலிப்பாடல்:

முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி
முடுகு முருடு ஒலி முடிவு இலா
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி
கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி
தொடுகு துதி ஒலி தொடுதலால்
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி
படுதல் இல மணம் ஆயதே.
உரை: முடுகுகின்ற முரசொலியும் மத்தள ஒலியும் முருட்டின் ஒலியும் முடிவில்லாமல் ஒலிக்கவும், விரைந்து எழுகின்ற பறையின் ஒலியும் கடத்தின் ஒலியும் கனிவோடு எழுந்து ஒலிக்கவும், இயக்குகின்ற நாதசுர ஒலியும் மக்கள் பாடும் குரலொலியும் வாழ்த்தொலியும் ஒன்றாக இணைவதனால் மேகத்தில் எழும் இடியொலியும் கடலில் எழும் அலையொலியும் கெடுமாறு, எவ்வகையிலும் குறைபடுதல் இல்லாத திருமணம் நிறைவேறியது.

http://ta.wikipedia.org

கருத்துகள் இல்லை: