Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 16, 2009

உடலைக் காக்கும் பொடுதலை…




கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.

இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்

அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவரு

பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்

வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து

(அகத்தியர் குணபாடம்)

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil – Poduthalai

English – Lippia

Sanskrit – Jalapippali

Telugu -Bokkenaku

Malayalam -Kattu thippali

Botanical Name – Phyla nodiflora

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.

இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை: